பாடகர் மனோவின் மகன் துருவன் மனோ கதாநாயகனாக அறிமுகம் ஆகா, மீனாட்சி கோவிந்தராஜன், ஆர்.கே.சுரேஷ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப் நடிப்பில் பித்தக் புகழேந்தி இயக்கி இருக்கும் படம். மதியழகன் மற்றும் வீரம்மாள் தயாரித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் இருக்கும் இரண்டு முக்கியமான இயற்கையான போதைப் பொருட்கள் கஞ்சா மற்றும் போதைக் காளான்.
இந்த போதைக் காளான் அதிகமாக சிறப்பாக விளையும் இடம் கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் (கானல் என்றால் காடு என்று பொருள்) என்று படத்தின் துவக்கத்தில் சொல்கிறார்கள். (உண்மை என்னவென்று யாமறியோம் பராபரமே)
பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புழங்கும் இந்தத் தொழிலைக் கைக்குள் வைத்திருக்கும் தாதா ஒருவன் (ஆர்.கே.சுரேஷ்) அவர் எடுத்து வளர்த்த மகன்கள். அவர்களில் மூத்த மகன் (துருவன் மனோ) முக்கியமானவன்.
அந்த போதைக் காளான் சிறப்பாக விளையும் நிலம் ஒன்று ஒரு பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான ஒரு பேச்சு மாற்றுத் திறனாளிப் பெண்ணிடம் (மீனாட்சி கோவிந்தராஜன்) இருக்கிறது.
சிறுவயதில் அப்பாவோடு வாழ்ந்த காலத்தில் அவர்கள் பயன்படுத்திய கார் இப்போது தாதாவின் மூத்த மகனிடம் இருக்கிறது.
இவளுக்கு ஐந்து வயதில் நடந்த விபத்து ஒன்றில் அந்தக் காரிலேயே அப்பா (மனோ) இறந்துவிட, இப்போது அந்தக் கார் தாதா மகனிடம் இருக்க, அந்தக் காரை அவள் விலைக்குக் கேட்கிறாள் அவள்.
தர மறுக்கிறான் தாதாவின் மகன். அதற்குப் பதிலாக என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று அவள் சொல்லியும் ஆனால் அவன் காரைத் தர மறுக்கிறானாம்,
ஒரு நிலையில் பணக்காரப் பெண், தாதாவின் அந்த மூத்த மகனைக் காதலிக்கிறாள்.
ஒரு நிலையில் கார் மீது அவளுக்கு இருக்கும் செண்டிமெண்ட் காரணமாக, அவன் கொண்டு வந்து கொடுத்த காரையே ‘இனி யாரிடம் இருந்தால் என்ன?’ என்று அவனிடமே கொடுத்து விடுகிறாள். அப்படி கொடைக்கானல் மழைக்காடுகளைப் போல அடர்ந்த காதல்.
இதற்குப் பிறகும் அந்தப் பெண்ணிடம் இருந்து அந்த நிலத்தை எப்படியாவது பெற பல ‘திட்டங்கள்’ போடுகிறார்கள் .
இப்படியான சூழலில், அந்தப் பெண்ணின் நல்ல எண்ணம் அவளது எஸ்டேட்டில் வேலை செய்யும் பயனாளிகளே தப்பாகப் புரிந்து கொண்டு அந்தப் பெண்ணுக்கு கெடுதல் செய்ய, நடந்தது என்ன என்பதே இந்தப் படம்.
எம்.எம்.ஆனந்தின் ஒளிப்பதிவில் படம் முழுக்க கொடைக்கானலில் அழகழகான பின்புலத்துடன் வசீகரிக்கிறது.
மாரீஸ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
டான் அசோக் சண்டைக் காட்சிகள் தெறிக்க விடுகிறது.
படத்தில் துருவனின் காதலியின் அப்பாவாக நடித்துள்ளார் மனோ.
மனோவின் ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு பலம். ஆனால், முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் இருப்பதால் தாடியோடு இருக்கும் அவர் முகம், கொடைக்கானல் காட்டு மரங்களின் உச்சியில் புல்செடிகள் முளைத்தது போல இருக்கிறது.
ஆர்.கே.சுரேஷ் தனது வழக்கமான பாணியில் ‘அழுத்த்த்தமாக’ நடித்து இருக்கிறார்.
மீனாட்சி கோவிந்தராஜன், வித்யா பிரதீப், ஆடுகளம் நரேன் சிறப்பாக நடித்துள்ளனர்.
கொடைக்கானல் போதைக் காளான் என்று ஆரம்பித்தபோது, அதன் பின்னால் உள்ள நெட் ஒர்க், மாபியா, அரசியல், பணக்காரர்கள், அதனால் பாதிக்கப்படும் சமுதாயம் என்று படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் வழக்கமான காதல், அப்பாவிப் பெண், அனாதைகள் செண்டிமெண்ட் என்று நாமே தலையைத் தொங்கப் போடுகிறோம்
சிறு வயதில் அந்தப் பெண்ணும் அவள் அப்பாவும் இருந்த காரை திருப்பிக் கொடுத்தல் என்ன வேண்டுமானாலும் தருகிறேன் என்று அவள் சொல்லும்போது, ”கார் இந்தா, அந்த நிலத்தைக் கொண்டா …” என்றால் நிலம் வந்திருக்கும்.
அதுதான் இல்லை.. அவள் அவனைக் காதலிக்க ஆரம்பித்த பிறகு கல்யாணம் முடிந்தால் சொத்து எல்லாம் அவர்கள் வசம் வந்துவிடும் அப்போது அந்த நிலத்தை எடுத்துக் கொண்டு,
அவள் அந்த நிலத்தை யாருக்குக் கொடுக்க நினைக்கிறாளோ அவர்களுக்கு அதே கொடைக்கானலில் வேறு நிலம் கொடுத்து விட்டால் போச்சு.
ஏனெனில் அவள் அப்பாவின் நினைவாக இருந்தா காரையே அவனிடமே விட்டு வைக்கும் அளவுக்கு அவன் மேல் அவள் காதல் கொண்டிருக்கிறாள்.
அதையும் மீறி வித்தியாசமாகக் கதை சொல்கிறேன் என்று தொழிலாளர்களைத் தப்பாகக் காட்டுகிறார்கள். (உண்மையில் நடந்த கதை என்று ஒரு சென்டிமென்ட் பிட்டைப் போடக் கூடாது)
கடைசியில் எல்லோரும் எல்லோரையும் வெட்டியோ குத்தியோ அடித்தோ கொலை செய்ய, அடுத்து நம்மை வந்து ஏதும் பண்ணிடப் போறாங்க என்ற பயம் வருகிறது.

பேச்சு மாற்றுத் திறனாளிப் பெண், ஐந்து வயதில் சிறுமியாக இருக்கும்போது அவள் அறையில் இருந்த வண்ணத்துப் பூச்சி படம், அவள் இருபத்தைந்து வயதில் மீண்டும் வரும்போதும் அப்படியே இருக்கிறது .
சரி அது கூட மெயின்டனன்ஸ் என்று எடுத்துக் கொள்வோம். ஆனால் அவள் ஐந்து வயதில் அந்தக் காரில் கீறி வைத்த ”ஐ லவ் யூ மாம் அண்ட் டாட்” என்ற வாசகம் இருபது வருடம் ஆகி, அந்தக் கார் துருவனிடம் இருக்கும்போதும் காரில் அப்படியே இருக்கிறது.
அதை வேறு அடிக்கடி ஏக்கத்தோடு தடவித் தடவிப் பார்க்கிறாள்.
அவன் அதை பார்க்காமல் டைரக்டர் சொன்னபடி வேறு பக்கம் பார்த்துக் கொண்டே நிற்கிறான்.
அந்த வண்டி சர்வீஸ், பிட்னஸ் சர்டிபிகேட் டெஸ்ட், பட்டி டிங்கரிங் என்று எதற்குமே இருபது வருடமாகப் போகவில்லையா?
கலை இயக்குநர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.
வட்டக் கானல் – கானல் நீர்.
– சு.செந்தில் குமரன்