Take a fresh look at your lifestyle.

‘வாலி’யைக் கொண்டாட வாருங்கள்!

83

இந்தியாவிலேயே அதிகமான திரைப்படப் பாடல்களை எழுதியவர் என்ற பெருமையும் ஐந்து தலைமுறை கதாநாயகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையும் உடைய ஒரே திரைப்படப் பாடலாசிரியர் பத்மஸ்ரீ வாலி.

அரசியல் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு கலைஞர், எம்.ஜி.ஆர். என்ற இருபெரும் தலைவர்களாலும் நேசிக்கப்பட்டவர்.

வாலி பதிப்பகம் சார்பில் காவியக் கவிஞர் வாலியின் 94-வது பிறந்தநாள் விழா 01.11.2025 சனிக்கிழமை மாலை இறைச்செல்வர் சிவாலயம் மோகன் அவர்கள் தலைமையில்,

பண்பாளர் நெல்லை பாலசுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் சென்னை தியாகராயநகர் கவியரசு கண்ணதாசன் சிலை அருகிலுள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் நடைபெற உள்ளது.

ஆண்டுதோறும் ரூ.50,000 பொற்கிழியுடன் வழங்கப்படும் வாலி விருது இந்த ஆண்டு எழுத்தாளர் மாலனுக்கும் கவிஞர் கங்கை அமரனுக்கும் வழங்கப்பட உள்ளது.

விருதுகளை திரைப்பட இயக்குநர் கே. பாக்யராஜ் வழங்குகிறார்.

திரைப்பட உதவி இயக்குநர் கவிஞர் பதுமை செல்வன் எழுதிய ‘வாலியின் திரைப்பாட்டு முழக்கங்கள்’ எனும் நூலை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிடுகிறார்.

ஊற்றங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் தலைவர் திருமால் முருகன் நூலினைப் பெற்றுக்கொள்கிறார்.

வாணியம்பாடி முத்தமிழ் மன்றச் செயலாளர் திரு நா.பிரகாசம் கவிஞர் வாலியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைக்கிறார்.

வாலி பதிப்பக நிர்வாக இயக்குநர் பொறியாளர் பாரதி சங்கர் வரவேற்புரை ஆற்றும் இந்த நிகழ்ச்சியை திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் திரு.சிவகுருநாதன் ஒருங்கிணைக்கிறார்.

முன்னதாக மாலை 5 மணிக்கு திரைப்பட இசையமைப்பாளர் தாயன்பன் வழங்கும் மெல்லிசை நிகழ்ச்சியில், பிரபல பாடகர்கள் பங்கேற்று வாலியின் திரை இசைப் பாடல்களைப் பாடுகிறார்கள்.

அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.