Take a fresh look at your lifestyle.

“அன்னை மனமே என் கோயில்!”

176

திரைத் தெறிப்புகள் – 45 :

* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் பல நம்பிக்கை ஊட்டும் பாடல்கள் வெளிவந்து மிகவும் பிரபலமடைந்திருக்கின்றன.

பட்டுக்கோட்டையார் துவங்கி, மருதகாசி, கண்ணதாசன், வாலி என்று பாடலாசிரியர்களின் பட்டியலில் நீளும் அந்த வரிசையில், கவிஞர் கண்ணதாசன் எழுதி 1961-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “உலகம் பிறந்தது எனக்காக” என்கிற பாடல் மிகவும் குறிப்பிடத்தக்கது.

“உலகம் பிறந்தது எனக்காக.
ஓடும் நதிகளும் எனக்காக.
மலர்கள் மலர்வது எனக்காக – அன்னை
மடியை விரித்தாள் எனக்காக…”

என்று உற்சாகம் பொங்கும் குரலில் டி.எம்.சௌந்தர ராஜன் பாடியுள்ள இந்தப் பாடலுக்கு, ஓடி ஆடியபடி நடித்திருப்பார் எம்.ஜி.ஆர்.

மேலே குறிப்பிட்ட பாடல் வரிகளைக் கேட்கும்போது உலகமே நமக்குச் சொந்தம் என்கின்ற உணர்வு மேலோங்கும் விதத்தில் இசையமைத்திருப்பார்கள், இசை இரட்டையர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி.

“காற்றில் மிதக்கும் ஒலிகளிலே,
கடலில் தவழும் அலைகளிலே,
இறைவன் இருப்பதை நானறிவேன்.
என்னை அவனே தானறிவான்.

“தவழும் நிலவாம் தங்கரதம்.
தாரகை பதித்த மணி மகுடம்.
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்….” என்று நீளும் அந்தப் பாடல்.

70-களுக்குப் பிறகு தனி இயக்கத்தை துவக்கி, மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தவரான எம்.ஜி.ஆர். அதற்குப் பல ஆண்டுகளுக்குப் முன்பே “எனது அரசாங்கம்” என்று குறிப்பிட்டு அன்றே பாடியிருப்பது கவனம் பெறக்கூடிய ஒன்று.

“எல்லாம் எனக்குள் இருந்தாலும்
என்னைத் தனக்குள் வைத்திருக்கும்
அன்னை மனமே என் கோயில்.
அவளே என்றும் என் தெய்வம்.”

– என்று நிறைவுறும் இந்தப் பாடல் எவ்வளவு மாயாஜாலங்களை எல்லாம் நிகழ்த்துகிறது!

உலகம் நமக்கானது என்கிற பிடிமானத்தை மனதிற்கு உணர்த்திகிறது. சுற்றியுள்ள இயற்கை நம்முடையது என்பதைக் கற்பிக்கிறது. தாயை மனதில் தெய்வமாகக் கொண்டாடச் சொல்கிறது.

ஒரு பாடல் நிறைவடைதற்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன!

*

-மணா.