இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் படங்களில் பெண் கதாபாத்திரங்கள் எப்போதும் துணிச்சலானவை.
அந்த வரிசையில் நடிகை சுஹாசினிக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத்தந்த திரைப்படம் ‘மனதில் உறுதி வேண்டும்’ (1987).
விவேக் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.
இப்படத்தில் இடம்பெற்ற ‘வங்காளக் கடலே’ பாடல் இன்றும் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் ஒரு புதுமையான முயற்சி.
சுஹாசினியின் பிடிவாதம்:
இப்பாடலில் சுஹாசினி முன்னணி நடிகர்களுடன் நடனமாடுவது போன்ற ஒரு கற்பனைக் காட்சி வரும். சத்யராஜ் மற்றும் விஜயகாந்த் ஆகிய இருவருடன் சுஹாசினி ஆடியிருப்பார்.
மூன்றாவது சரணத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை ஆட வைக்க கே.பாலசந்தர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இதற்கு சுஹாசினி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தனது சொந்த சித்தப்பா என்பதால், அவருடன் ஜோடி சேர்ந்து டூயட் ஆடுவதை ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்றும், தனிப்பட்ட முறையில் தனக்கும் அதில் விருப்பமில்லை என்றும் வெளிப்படையாகக் கூறிவிட்டார்.
கமல்ஹாசனும் இதையே வழிமொழிந்து, தனக்கு பதிலாக கார்த்திக் அல்லது பிரபுவை நடிக்க வைக்கலாம் என்று யோசனை கூறியுள்ளார்.
கைகொடுத்த ரஜினிகாந்த்:
இறுதியில் கே.பாலசந்தர் தனது ஆஸ்தான நாயகன் ரஜினிகாந்தை அணுகினார்.
சுஹாசினியின் தயக்கத்தை உணர்ந்து ரஜினிகாந்த் அந்தப் பாடலில் அவருடன் இணைந்து ஆடினார்.
இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்தப் பாடலில் நடித்ததற்காக கேப்டன் விஜயகாந்த் எந்தவித ஊதியமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுஹாசினியின் அந்த அன்றைய தீர்க்கமான முடிவு, இன்றும் அந்தப் பாடலின் கண்ணியத்தைக் காப்பாற்றி வருவதாக சினிமா வட்டாரங்கள் பேசுகின்றன.
– ஜான்
நன்றி – தமிழ் மினிட்ஸ்