Take a fresh look at your lifestyle.

இசையின் வலிமையை உணர்த்தியது அப்பா தான்!

-பிரதாப் போத்தனின் மகள் கேயா

நடிகர் பிரதாப் போத்தன் என்று சொன்னால் 2K கிட்ஸ் பலருக்கும் தெரியாது. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் தேதி மறைந்தபோது பல ஊடகங்கள் நடிகை ராதிகாவின் முதல் கணவர் பிரதாப் போத்தன் என்று அடையாளப்படுத்தி செய்தி வெளியிட்டன.

தமிழில் பாலு மகேந்திராவின் அழியாத கோலங்கள், மூடு பனி, வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், தில்லுமுல்லு, படிக்காதவன் எனப் பல படங்களில் மிகச் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் இவர்.

இவர் இயக்கிய ‘சீவலப்பேரி பாண்டி’ அந்தக் காலத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. அதேபோல லக்கி மேன் படமும் அதிகம் பேசப்பட்டது. ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலில் பிரதாப் போத்தன் மிகச் சிறப்பாகத் தோற்றம் கொண்டிருப்பார்.

இவரது வாழ்க்கையில் மறக்கவே முடியாத மிக சிறந்த பாடல் என்று இதைக் கட்டாயம் பலரும் சொல்வார்கள்.

தமிழ்ப் படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இவரைப் பலரும் அதிகமாக மலையாளப் படங்களோடுதான் தொடர்புப்படுத்தி அடையாளம் கண்டுகொள்கின்றனர்.

பிரதாப் மலையாளத்தில் நடித்தாலும் அவர் சென்னையில் தான் வாழ்ந்துவந்தார். அது அவர் இறக்கும் வரை பலரும் அறியாத செய்தியாகவே இருந்தது.

ஒரு காலத்தில் ஸ்டார் நடிகராக இருந்த இவர், தமிழ் சினிமாவில் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்துவந்தார். ஒரு சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் விலகியே இருந்து வந்தார்.

பிரதாப் இறந்து 2 ஆண்டுகள் மேல் ஆகிவிட்டன. இப்போது அவரது மகள் கேயா, தனது தந்தையைப் பற்றிய நினைவுகளை மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தந்தையைப் பற்றிப் பேசிய கேயா, “பல வருடங்களாக அப்பாவிடம் ஒரு கேண்டி கேம் வாங்கி தரச் சொல்லிக் கேட்டுப் போராடிக் கொண்டிருந்தேன்.

அவர் ஒருமுறை எனது பிறந்த நாளின்போது ஒன்றை வாங்கி பரிசாகக் கொடுத்தார். நான் அதைவைத்து சில படங்களைப் பிடித்தேன்.

என் படுக்கை அறையில் உள்ள புத்தகங்களுடன் அதை வைத்துக் கொண்டேன். என் வீட்டில் நிறையப் புத்தகங்கள் இருந்தன. எனக்குப் படிக்கும் பழக்கத்தை அப்பாவும் அம்மாவும்தான் கற்றுத் தந்தனர்” என்று கூறி இருக்கிறார்.

“என் அப்பா நடிகர் மட்டுமல்ல. அவர் ஒரு சிறந்த இயக்குநர். மலையாளம், தமிழ், தெலுங்கு எனப் பல மொழிகளில் படங்களை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய ‘மீண்டும் ஒரு காதல் கதை’ எனக்குப் பிடிக்கும். அதே மாதிரி ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தை அதிகம் எனக்குப் பிடிக்கும்.

ஒரு நடிகராக, ‘ஒன்ஸ் அபான் எ டைம் தேர் வாஸ் எ கல்லன்’ என்ற மலையாளப் படத்தில் அப்பா சிறப்பாக நடித்திருப்பார். அவரது நடிப்பை நான் அதில் அதிகம் ரசித்தேன்.

இந்தப் படம்தான் அவருக்குக் கேரள அரசின் விருதைப் பெற்றுத் தந்தது. ஒரு புத்தகத்தை வாசிப்பதைப் போல அந்தப் படம் அழகாக இருக்கும். இது அவரது 100வது படம்” என்கிறார்.

தொடர்ந்து பேசிய கேயா, “எனது வேலைகள் மூலம் அப்பாவின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருப்பது. எனக்கு அது முக்கியம். அவரை என்றுமே மறக்கவே முடியாது.

அவர் எனது சிறந்த நண்பனாகவும் இருந்தார். பெரிய புத்திசாலி. அன்பான, மிக ஜாலியான மனிதராக மக்கள் அவரை அறிய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.” என்கிறார்.

கேயா அவரது அப்பா நடித்த ‘அப்பாவும் வீஞ்சும்’ படத்தில் பாடகியாக மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

அந்த வாய்ப்பு எப்படி வந்தது என்பது பற்றி கேயா கூறியுள்ளார். “அப்படத்திற்கு யாராவது ஆங்கிலத்தில் எழுதிப் பாட வேண்டும் என்று உசேபச்சான் விரும்பினார். என் தந்தை என்னைச் சிபாரிசு செய்தார்.

அதற்கு முன்பே எனது பாடல்களை அவருடன் பகிர்ந்து கொண்டார். உசேபச்சானுக்கு என் பாடல் பிடித்துவிட்டது. அவர் என்னை அணுகினார். அது ஒரு அற்புதமான அனுபவம்.

இசை என் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருந்தது. இன்றைக்கு நான் ரசித்துக் கேட்கும் பாடகர்களை, இசைக் குழுக்களை என் அம்மா அப்பாதான் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

இதுவரை எழுதிய ஒவ்வொரு பாடலின் வரிகளும் என் தந்தைக்குத் தெரியும். இசை எவ்வளவு வலிமையானது. அது எவ்வளவு ஆறுதலை அளிக்கக்கூடியது என்பதை அவர்தான் எனக்கு கற்றுத்தந்தார்.

எனது திறமை எனது பெற்றோர் இருவரிடமிருந்துதான் வந்தது. அதன்பின்னர் நான் சொந்தமாக எப்படிப் பாடுவது என்பதைக் கண்டேன்” என்று கூறியுள்ளார்.