Take a fresh look at your lifestyle.

ஜனகராஜுக்கு பேர் வாங்கிக் கொடுத்த அந்த காமெடி!

படிக்காதவன் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி

53
1980, 90களில் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக கலக்கியவர் ஜனகராஜ். இவரின் குரலே ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கும்.
 
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, கார்த்திக் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பெரும்பாலானோரின் படங்களில் நடித்திருக்கிறார்.
 
இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ‘கிழக்கே போகும் ரயில்’ படம் மூலம் ஜனகராஜ் நடிக்க துவங்கினார். அதேபோல், சுவரில்லாத சித்திரங்கள் படத்திலும் நடிக்க வைத்தார்.
 
அதன்பின் பாலைவனச் சோலை, நிழல்கள், கல்யாண காலம், காதல் ஓவியம், பாயும் புலி, மண் வாசனை, கடலோரக் கவிதைகள், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் ஜனகராஜ் பிரபலமானார்.
 
சுமார் 200 படங்களுக்கும் மேல் ஜனகராஜ் நடித்திருக்கிறார். நாயகன் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் கலக்கி இருக்கிறார்.
 
ஜனகராஜ் பிறந்து வளர்ந்து எல்லாமே சென்னையில்தான். பாரதிராஜாவிடம் உதவியாளராகத்தான் சேர்ந்தார். ஆனால், அவருக்குள் இருக்கும் நடிகனை பாரதிராஜா கண்டுபிடித்து வாய்ப்பு கொடுத்தார்.
 
விஜய் சேதுபதியின் 96 படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்தார். கடைசியாக தாதா 87 படத்தில் நடித்திருந்தார். அதன்பின் அவரின் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.
 
ஜனகராஜை ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைய வைத்தது ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் அவர் பேசிய ‘தங்கச்சியை நாய் கட்ச்சிச்சிப்பா’ வசனம்தான்.
 
‘படிக்காதவன்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது ரஜினியிடம் இப்படி பேசி காட்டியிருக்கிறார் ஜனகராஜ். ‘இது நல்லா இருக்கே, படத்துல வைக்கலாமே’ என இயக்குநர் ராஜசேகரிடம் சொல்லி படத்தில் அந்த காமெடியை வைத்தார் ரஜினி.
 
ஆனால், படம் முடிந்து எடிட்டிங் டேபிளில் இருந்தபோது நீளம் கருதி அந்த காமெடியை இயக்குநர் வெட்டிவிட்டார்.
 
படம் வெளியானதும் ‘அந்த காமெடி ஏன் எடுத்தீங்க.. படத்துல சேருங்க. கண்டிப்பா அது ஹிட் அடிக்கும்’ என ரஜினி சொல்ல அந்த பிலிமை ஊர் ஊராகப் போய் படத்தில் சேர்த்தார்கள்.
 
ரஜினி சொன்னது போலவே அந்த காமெடிக்கு ரசிகர்களிடம் அவ்வளவு வரவேற்பு இருந்ததை பார்த்து அப்படத்தின் இயக்குநர் ராஜசேகரே ஆச்சர்யப்பட்டு போனாராம்.