Take a fresh look at your lifestyle.

அனைவராலும் ரசிக்கப்படுமா ‘அதர்ஸ்’?

44

அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரிஷ் பெராடி, நண்டு ஜெகன் நடிப்பில் அபின் ஹரிஹரன் இயக்கியிருக்கும் படம் ‘அதர்ஸ்’. கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு.

2001 ஆம் ஆண்டில் இதே பெயரில் ஒரு ஆங்கில சூப்பர் நேச்சுரல் சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படம் வந்திருக்கிறது.

மனிதர்களைப் பால் ரீதியாகப் பிரிக்கும் பதிவுகளில் ஆண் (MALE), FEMALE (பெண்), தவிர OTHERS (மற்றவை) என்று ஒரு பிரிவு இருக்குமில்லையா? அதுதான் அதர்ஸ். 

இரவில் முக்கியச் சாலையின் நடுவில் பெரிய கல்லை வைத்து, அதில் மோதி நிற்கும் வாகனங்களில் இருந்து, கொள்ளையடிக்கக் காத்திருக்கிறான் ஒருவன்.

அப்படி ஒரு வேன் வந்து மோதி காற்றில் பறந்து விழுந்து, வெடித்து, நெருப்பு பற்றி, அதில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் எரிந்து கருகிப் போயிருக்கிறார்கள்.

விசாரிக்கிறார் அசிஸ்டன்ட் கமிஷனர் (ஆதித்யா மாதவன்). அவரது காதலி ஒரு டாக்டர் (கவுரி கிஷன்).

விசாரணைக் குழுவில் ஒரு பெண் போலீஸ் அதிகாரியும் (அஞ்சு குரியன்) உண்டு.

இறந்த அந்த மூன்று பெண்களில் ஒரு பெண் எரிக்கப்படும் முன்பே காயப்படுத்தப்பட்டு இருக்கிறாள்.

அந்த ஆண் உடல் வேனின் மேலே வெளிப்பக்கம் கிடந்தபடி எரிந்து இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

காதலி மருத்துவராக வேலை செய்யும் செயற்கைக் கருத்தரித்தல் மையத்தில் கருமுட்டைக்குள் விந்தணு செலுத்தப்பட்டு பிறகு, அந்தக் கருவை வயிற்றில் செலுத்தி கரு வளர்ந்து பிரசவிக்கும் சிகிச்சையில் ஒரு முறைகேடு கண்டுபிடிக்கப்படுகிறது.

செயற்கைக் கருத்தரித்தல் முறையில் பிறக்கும் குழந்தைகள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத இடைப்பட்ட இனக் குழந்தைகளாக வளர்வதற்கான ஹார்மோன்கள் செலுத்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

வேனில் இறந்த பெண்கள் எல்லோரும் கண் பார்வையற்ற நபர்கள் என்பதும் அவர்கள் அனைவரும் கருணைக் கோயில் என்ற அனாதை இல்லத்தில் இருந்தவர்கள் என்பதும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கொல்லப்பட்டு இருப்பதுவும் தெரிய வருகிறது.

பார்வையற்ற பெண்கள் கொலை வழக்கும் கருத்தரித்தல் மையம் சம்மந்தப்பட்ட அதிர்ச்சியும் ஒரு புள்ளியில் ஒன்று சேரும்போது நடந்தது என்ன என்பதே படம்.

முதல் காட்சியே அளவுக்கு மீறிய நீளத்தில் இருக்கிறது.

ஜிப்ரனின் அருமையான பின்னணி இசை இல்லாவிட்டால் அந்தக் காட்சியே சுமையாக ஆகி இருக்கும்.

படம் முழுக்க சிறப்பாக இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான்.

கதையாக ஆரம்பம் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால். ‘அந்தப் படத்துல இருந்து அதை எடு…. இந்தப் படத்துல இருந்து இதை எடு.. கிளைமாக்சில் யாரும் எதிர்பாராத கனமான விஷயம் ஒன்றை சொல்லு,

அது நியாயமாக இருக்கத் தேவை இல்லை; வித்தியாசமாக இருந்தால் போதும்’ என்ற ரீதியில் திரைக்கதை போய் விடுகிறது.

அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு படத்தின் திரில் தன்மைக்கு நியாயம் செய்கிறது.

ராமரின் எடிட்டிங் ஓகே ரகம்.

நாயகன் ஆதித்யா மாதவன் கேரக்டருக்குப் பொருத்தமாக நடித்துள்ளார். அழகான எக்ஸ்பிரஷன்களால் கவர்கிறார் கவுரி கிஷன். அஞ்சு குரியன் போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்துகிறார்.

ஹரீஷ் பெராடிக்கு பழகிய கேரக்டர். நண்டு ஜெகன் நைஸ்.

வில்லன் நாயகியைத் துரத்த, அவளுக்கு நாயகன் செல்போனில் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தே போலீஸ் இருக்கும் பகுதிக்கு போக வைத்து வில்லனை மடக்கும் சீன் பிரம்மாதம்.

ஒரு சிறுபான்மை தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டால், அந்தச் சிறுபான்மை தங்களைப் பெரும்பான்மையாக்கிக் கொள்ள எந்த எல்லைக்கும் போகும் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்கள் சைக்காலஜி என்பதே இயக்குனர் சொல்ல வரும் கருத்து.

(மத உணர்வாளர்கள் கூட தங்களை எண்ணிக்கை அளவில் அதிகமாக்கிக் கொள்ளவோ அல்லது குறையாமலோ பார்த்துக் கொள்வது அதனால்தானே?)

ஆனால் கடைசியில் வரும் அந்த அதீத கனம் படத்துக்குப் பலன் தருமா என்பது கேள்விக்குறியே.

மாறாக இடைவேளையிலேயே அந்த சஸ்பென்சை ஓப்பன் செய்து, எதிர்த்தரப்பு நியாயத்துக்கான காரணத்தை இன்னும் வலுவாக அழுத்தமாக காட்சிகளில் சொல்லி,

இன்னும் கொஞ்சம் விவாதத்தை நீட்டித்து ஹீரோயிசத்தைக் குறைத்து யார் ஜெயிப்பார் பார்ப்போம் என்ற சவாலையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தால்,

இந்தப் படத்தின் நோக்கமும் படம் பார்ப்பவர்களால் இந்த கிளைமாக்ஸ் ஏற்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்து இருக்கும்.

OTHERS என்ற வார்த்தையை அப்படியே தமிழ்ப்படுத்தி அதன் நேரடிச் செயல்பாடு என்ற பொருளில் ‘மற்றவை…. நேரில்’ என்ற பெயர் வைத்து இருந்தால்கூட இந்தப் படம் இன்னும் எளிதாக ரசிகர்களை அடைய வாய்ப்பு உண்டு.

– சு. செந்தில் குமரன்