திரைத் தெறிப்புகள் 62 :
*
கவியரசர் கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கணீர்க் குரலோன் டி.எம். சௌந்தரராஜன் ஆகியோர் ஒன்றிணைந்த கூட்டணியில் வெளிவந்த பல பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.
1964-ம் ஆண்டு வெளிவந்த ‘பச்சை விளக்கு’ திரைப்படத்தில் இடம்பெற்ற,
“ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது.
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது…”
– என்று துவங்குகிற இந்தப் பாடலைக் கேட்கிற எந்த மனதிலும், நம்பிக்கையை ஏற்றி எதிர்காலம் பற்றிய நல்லெண்ணத்தை விதைக்கும் விதமாக அமைந்திருக்கும்.
இந்தப் படத்தில் ரயில் ஓட்டுநராக வரும் சிவாஜி கணேசன், ரயில் நகர்ந்தபடி இருக்க, கல்லூரிக்கு மருத்துவக் கனவுடன் படிக்கப்போகும் தனது தங்கை விஜயகுமாரியை நினைத்துப் பாடுவதாக அமைந்திருக்கும் அந்தக் காட்சி.
“நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் – அந்த
நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார்.
மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள்.
வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்…”
எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் டி.எம்.எஸ்., தனது அழுத்தமான குரலில் இந்தப் பாடலைப் பாடியிருப்பதைக் கேட்கும் போது, நம் மனதிற்குள் பசுமையான இளம் நாற்று நடுவதைப் போல் இருக்கும். மறுபடியும் கேட்கக் தூண்டும்.
“குங்குமச் சிலையே! குடும்பத்து விளக்கே! குலமகளே வருக! – எங்கள்
கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!
மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக!
வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக…”
– இந்தப் பாடலில் தங்கையின் வருகையை விதவிதமாக வர்ணித்திருக்கின்ற கண்ணதாசன், நிறைவாக, “வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக” என்று நம்பிக்கை துளிர்க்க முடித்திருப்பது, மன நிறைவானதொரு முத்தாய்ப்பு.
*
– மணா
#பச்சை_விளக்கு #Pachhai_vilakku #கவிஞர்_கண்ணதாசன் #Kavignar_Kannadasan #எம்எஸ்_விஸ்வநாதன் #MS_Viswanathan #டிஎம்_சௌந்தரராஜன் #TM_Soundararajan #நடிகர்_திலகம்_சிவாஜி_கணேசன் #Nadigar_thilagam_Sivaji_ganesan #விஜயகுமாரி #Vijayakumari #ஒளிமயமான_எதிர்காலம்_என்_உள்ளத்தில்_தெரிகிறது #Olimayamaana_ethirkaalam_en_ullatthil_therigirathu