Take a fresh look at your lifestyle.

இல்லாதவர்களுக்கு ஈவதில் எம்.ஜி.ஆர் இன்னொரு பேகன்!

கவிஞர் வாலி

313

‘ஏழு வள்ளல்கள்-

ஏட்டிலும் பாட்டிலும்-

இருந்தது முன்னாலே;

எங்கள்

மன்னவன் வந்தான்-

மற்றவ ரெல்லாம்-

இவனுக்குப் பின்னாலே!’

என்று நான் – ஒருமுறை

ஏத்தியது நிஜம்;

ஆம்;

அனேகருக்கு –

வழங்கி வழங்கி

வீங்கியிருந்தது அவன் புஜம்!

இல்லார்க்கு ஈவதில் – அவன்

இன்னொரு பேகன்;

நடிப்பிலிருந்து – பதவி

நாற்காலிக்கு வந்ததில்-

இப் புவிமிசை – அவன்

இன்னொரு ரொனால்ட் ரீகன்!

***

அவனை-

அறியு முன்…

வான்புகழ்

வெண் திரையில்-

அடியேன் வரைந்ததுண்டு

அனேக வரிகள்:

ஆயினும்-

அவன் பொருட்டு_ நான்

எழுதிய முதல்வரி-

எனக்குத் தந்தது முகவரி!

ஆம்!

அவனது – மன

விசாலம் – தந்ததெனக்கு

விலாசம்!

அவன்-

அம்பு கொண்டு-

வாலியை

வீழ்த்திய இராமச்சந்திரன் அல்ல;

அவன்-

அன்பு கொண்டு-

வாலியை-

வாழ்த்திய இராமச்சந்திரன்!

அதுமட்டுமல்ல;

அவன்…

இந்தியாவில் பிறந்து-

இலங்கை சென்ற-

இராமச்சந்திரன் அல்ல;

இலங்கையில் பிறந்து-

இந்தியாவிற்கு வந்த-

இராமச்சந்திரன்!

அந்த இராமச்சந்திரன்-

ஆதியில்…

மன்னனாயிருந்து-

பின் நாடோடி யானான்:

இந்த இராமச்சந்திரன்-

இளமையில்…

நாடோடி யாயிருந்து-

பின் மன்ன னானான்!

***

கோபால மேனன் – எனும்

குண வானுக்கும்;

சத்திய பாமா – எனும்

சகதர்மிணிக்கும்;

பிள்ளையாய்ப்

பிறந்தவன்-

எம்.ஜி.ஆர். என

எல்லோராலும் விளிக்கப் பெற்ற…

பெருமகன்; வெற்றித்-

திருமகன்;

ஓர் ஆயிரத்தில்-

ஒரு மகன்!

அவனது-

ஆரம்பம்…

மூன்று தமிழ்களில்

மூன்றாம் தமிழான நாடகத்தில்;

அதன்வழி

அவன் புகுந்தான்-

மெல்ல மெல்ல

மன்பதையின் நெஞ்சகத்தில்!

காளி. என்.ரத்தினம் –

குரு;

அவர்-

அந்நாளில் இட்ட எரு –

உண்டு

உயர்ந்தது-

எம்.ஜி.ஆர்.

என்னும் தரு!

முதன் முதல் – அவன்

முகம் காட்டிய படம்…

பலர் வாழ்வுக்குப்-

பிள்ளையார் சுழி போட்ட-

சினிமா எனப் பேசப்பெற்ற-

சதி லீலாவதி:

அதன்பின்-

அந்திமக் காலம் வரை-

அவனது புகழ்

ஆகவில்லை காலாவதி!

***

அறிஞர் பெருந்தகை

அண்ணாவின்-

இதயக்கனியாக

இலங்கியவன்;

தொய்வடையாத கீர்த்தியொடு-

துலங்கியவன்!

பெரும் பெயரைப்-

பெற்றுத் தந்த படங்கள்…

மந்திரிகுமாரி;

மலைக் கள்ளன்!

இந்தப் படங்களில் – அவன்

இயம்பிய உரையாடல்களை…

மாந்தர் செவிகள்

மாந்தின – அடடா!

முத்தமிழ்த் தேனா என்று!

அந்தத் தேனை

அருளியது –

கலைஞர் பெருமானின்

கைப் பேனா அன்று!

***
புரட்சித் தலைவர்’

‘பொன்மனச் செம்மல்’

‘மக்கள் திலகம்’

‘இதய தெய்வம்’

இவை யெலாம்-

இருந்தமிழர் உலகம்…

அவனுக்கு-

அளித்த பட்டங்கள்:

ஆயினும்

அவன்-

இத்தகு பட்டங்கள் பெற

இளமை முதல்-

ஏற்க நேர்ந்தது

எத்துணையோ கட்டங்கள்!

துன்பத்தில் பிழைத்தான்;

துப்பாக்கியில் பிழைத்தான்;

இத்துணை

இடுக்கண்களின்

இடையே – அவன்

இறவாது பிழைக்கக் காரணம்…

அவன் – இடையறாது

அறங்கள் இழைத்தான்!

அனேகருக்கு – அவன்

அன்ன மிட்டவன்;

அடித்தட்டு மக்களின்

அன்பு மனங்களைத் –

தனது-

தருமத்தால் கன்னமிட்டவன்!

***

ஏற்ற வேடங்களுக்கெல்லாம்

ஏற்றம் தந்தவன்;

இயல்பான நடிப்புக்கு-

இலக்கணமாய் வந்தவன்!

‘பெற்றால்தான் பிள்ளையா?’ எனும்-

பேசும் படம் – அவன்

பெருமையை – இன்றளவும்

பேசும் படம்!

சரித்திர வேடங்களில் – அவன் போல்

சாதித்தவ ரில்லை:

மதுரை வீரனாகவும்-

மன்னாதி மன்னனாகவும்-

அடிமைப் பெண்ணின்

அன்புக்குரிய அழகனாகவும்;

விளங்கி – நடிப்புக்கு

வகுத்தான் புதிய எல்லை!

***

அவனை-

அந்தகன் வெல்லவில்லை;

அவன்தான்

அந்தகனை வென்றான்;

ஆதலால் தான்-

அவன்-

இறந்தும் – இன்றளவும்

இறவாது நின்றான்!

தமிழ்த்

திரையில்..

என்-

ஏற்றம்-

அவன் தந்த பிச்சை;

அதைச் சொல்ல எனக்கில்லை லச்சை!

***

-கவிஞர் வாலி, இவர்கள் இன்னமும் இருக்கின்றார்கள் என்ற நூலிலிருந்து ஒரு கட்டுரை.