திரைத் தெறிப்புகள் – 72 :
*
கவியரசர் கண்ணதானின் தத்துவமயமான பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்று, அப்பாடல் வெளிவந்த காலத்தையும் மீறி நிற்கின்றன.
அதிலும் கவியரசரும், சீர்காழி கோவிந்தரராஜனும் இணைவது இன்னும் கூடுதல் சிறப்பு.
அப்படி 1962-ம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘போலீஸ்காரன் மகள்’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “கண்ணிலே நீர் எதற்கு?” என்று துவங்கும் பாடல் முழுக்கக் கேள்வியும் பதிலுமாகவே இருக்கும்.
கேள்வியைக் கேட்பது சீர்காழியின் குரல் என்றால், இனிமை குழைந்த குரலில் இசையோடு பதிலளிப்பது எஸ். ஜானகியின் குரலாக இருக்கும்.
“கண்ணிலே நீர் எதற்கு..?
காலமெல்லாம் அழுவதற்கு..
நெஞ்சிலே நினைவெதற்கு..?
வஞ்சகரை மறப்பதற்கு…”
இத்திரைப்படத்தில் அண்ணனாக நடிக்கும் முத்துராமன் கேள்வி எழுப்ப, தங்கையாக நடிக்கும் விஜயகுமாரி உணர்ச்சிபூர்வமான பாவத்துடன் பதிலளிக்கிறபடி நடித்திருப்பார்.
வித்தியாசமான மெட்டில் அமைந்த இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர்கள் எம்.எஸ். விஸ்வநாதன் – டி.கே. ராமமூர்த்தி.
கருப்பு – வெள்ளைப் படமாக இருந்தாலும், இந்தப் பாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கேமிரா கோணங்களும், லைட்டின் தொழில்நுட்பமும் இப்பாடலில் மேலும் நம்மை ஒன்ற வைக்கும்.
“இன்பமெனும் மொழி எதற்கு..?
செல்வத்தில் மிதப்பவர்க்கு…
துன்பமெனும் சொல்லெதற்கு?
உள்ளமென்பது உள்ளவர்க்கு..
கையிலே வளைவெதற்கு…?
காதலியை அணைப்பதற்கு…
காலிலே நடை எதற்கு…?
காதலித்துப் பிரிவதற்கு…”
குடும்பம் என்கின்ற அமைப்பிலும், காதல் என்கிற உறவிலும் கசப்புணர்வு ஏற்பட்டவர்களை ஆறுதல் படுத்தும் வரிகளோடு அமைந்திருக்கும் இப்பாடல்.
“பாசமென்ற சொல் எதற்கு..?
பார்த்திருந்து துடிப்பதற்கு..
ஆசை கொண்ட வாழ்வெதற்கு..?
அன்றாடம் சாவதற்கு..”
சீர்காழியின் வெண்கலக்குரல் கேள்வியும், நிறைகுடமாக உணர்வு ததும்பப் பதிலளிக்கும் ஜானகியின் குரலும் ஒன்றுக்கொன்று போட்டி போடும் அளவிற்கு இருக்கும் இப்பாடலில்.
“பூவிலே தேன் எதற்கு..?
வண்டு வந்து சுவைப்பதற்கு..
வண்டுக்கு சிறகெதற்கு..?
உண்ட பின்பு பறப்பதற்கு..”
ஒரு பாடலுக்குள் இவ்வளவு ‘செண்டிமெண்டா’ என்று இன்றைய வாழ்வின் நெறிகளோடு கேள்வி எழுப்ப முனைகிறவர்கள், இந்தப் பாடல் வெளிவந்த அந்தக் காலத்திய வாழ்க்கை மற்றும் உறவு மதிப்பீடுகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது என்பதையும் மென்மையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
*
– மணா
*