ரஜினிகாந்த் திரை உலகில் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானபோது கமல் அப்போது முன்னணி நடிகராக இருந்தார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கி கமல்ஹாசனையே வசூலில் மிஞ்சும் அளவுக்கு ஆளானார்.
இந்த நிலையில்தான் ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்று முடிவு செய்தனர். அதன்பிறகு இருவர் நடித்த திரைப்படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி அவர்களுடைய ரசிகர்களுக்கு இடையே பெரும் போட்டியை ஏற்படுத்தியது.
முதல் முறையாக 1983ஆம் ஆண்டு கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ மற்றும் ரஜினியின் ‘தங்க மகன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியானது.
ஒரு பக்கம் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது என்றால் இன்னொரு பக்கம் ‘தங்க மகன்’ திரைப்படத்தை சத்யா மூவிஸ் தயாரித்து இருந்தது. இரண்டு படங்களும் மசாலா படங்கள் என்பதால் இரண்டுமே வெற்றி பெற்றது.

அதேபோல் 1984ஆம் ஆண்டு தீபாவளியில் ரஜினியின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ மற்றும் கமல்ஹாசனின் ‘எனக்குள் ஒருவன்’ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.
இந்த முறை நல்லவனுக்கு நல்லவன் படத்தை ஏவிஎம் தயாரித்திருந்தது.
எனக்குள் ஒருவன் திரைப்படத்தை கே.பாலசந்தரின் கவிதாலயா தயாரித்திருந்தது.
இந்தப் போட்டியில் ரஜினியின் ‘நல்லவனுக்கு நல்லவன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. ‘எனக்குள் ஒருவன்’ சுமாரான வசூலையே பெற்றது.
இதனை அடுத்து 1985ஆம் ஆண்டு படிக்காதவன் மற்றும் ஜப்பானில் கல்யாணராமன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜப்பானில் கல்யாண ராமன் சுமாரான வெற்றியை பெற்றது.
ஆனால், அதே நேரத்தில் 1986ஆம் ஆண்டு ரஜினியின் மாவீரன் மற்றும் கமல்ஹாசனின் புன்னகை மன்னன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியான நிலையில் புன்னகை மன்னன் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மாவீரன் தோல்வியடைந்தது.
இதே நாளில்தான் கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான ‘பாலைவன ரோஜாக்கள்’ என்ற படம் வெளியாகி வெற்றிப் படமாக அமைந்தது.
இதனை அடுத்து 1987ஆம் ஆண்டு கமலஹாசனின் நாயகன் மற்றும் ரஜினிகாந்தின் மனிதன் ஆகிய படங்கள் வெளியானது. மணிரத்னத்தின் அருமையான இயக்கத்தில் உருவான நாயகன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சூப்பர் ஹிட் ஆகியது.
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மனிதன் திரைப்படம் மசாலா படம் என்ற விமர்சனத்தை பெற்றது. ஆனால் வசூல் அளவில் இரண்டு படங்களுமே சம அளவில் இருந்ததால் இரண்டுமே வெற்றி பெற்றதாக கருதப்பட்டது.
அதேபோல் 1988ஆம் ஆண்டு கிட்டத்தட்ட சில நாட்கள் இடைவெளியில் ரஜினியின் தர்மத்தின் தலைவன் மற்றும் கமல்ஹாசனின் சத்யா திரைப்படங்கள் வெளியானது.
இரண்டுமே இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படமாக இருந்தாலும் தர்மத்தின் தலைவன் திரைப்படத்தை ரஜினிகாந்த் தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருப்பார். அதேபோல் கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பில் வெளியான சத்யா திரைப்படமும் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து 1989ஆம் ஆண்டு கமல்ஹாசனின் வெற்றி விழா மற்றும் ரஜினிகாந்த் நடித்த மாப்பிள்ளை திரைப்படங்கள் வெளியானது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெற்றி விழாவும் சிரஞ்சீவி தயாரிப்பில் மாப்பிள்ளையும் உருவானது. இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது.
இதனை அடுத்து 1990ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பணக்காரன் திரைப்படமும் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் இந்திரன் சந்திரன் திரைப்படமும் வெளியானது. இதில் பணக்காரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து 1991ஆம் ஆண்டு ரஜினியின் தளபதி மற்றும் கமல்ஹாசனின் குணா வெளியானது. ரஜினியின் தளபதி படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார்.
இந்தப் போட்டியில் தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது மட்டுமின்றி அதுவரை ரஜினி மசாலா பட நடிகர் என்ற பெயர் பெற்றிருந்த நிலையில் அவரால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தவும் முடியும் என்பதை நிரூபித்தார்.
இதனை அடுத்து ரஜினி கமல் படங்கள் கடைசியாக மோதியது என்றால் கடந்த 2005ஆம் ஆண்டு என்று தான் சொல்ல வேண்டும். ரஜினியின் சந்திரமுகி மற்றும் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.
கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் தோல்வி அடைந்த நிலையில் சந்திரமுகி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று தமிழ்த்திரை உலகில் தான் நம்பர் ஒன் என்பதை ரஜினி மீண்டும் நிரூபித்தார்.
-பி.எம்.எம்.