உலகமே வியக்கும்படி, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சென்ட் ஆகியோரின் திருமண வைபவம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த பிரமாண்ட திருமணத்திற்கு உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் யார் வந்தார்கள் என்பதை விட, யார் வரவில்லை என்ற பட்டியல்தான் மிக சுருக்கமாக இருக்கும்.
இந்த ராயல் திருமணத்தின்போது, பல சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறி உள்ளன. அதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.
*40 நாள் உணவு:
அம்பானி குடும்பம் வசிக்கும் வீட்டிற்கு அருகில், பொதுமக்கள் திருமண விருந்து சாப்பிடும் விதமாக, 40 நாட்களுக்கு சுவையான உணவு பரிமாறி இருக்கிறார்கள்.
‘பபே’ முறையில் பரிமாறப்பட்ட இந்த விருந்தில், 5 நட்சத்திர விடுதி மெனுக்களில் இருக்கும் உணவுகளே அதிகம் பரிமாறப்பட்டன. உணவு பரிமாற ஒரு இடம், அமர்ந்து சாப்பிட ஒரு இடம் என 40 நாள் உபசரிப்பு களைகட்டியிருக்கிறது.
* ரூ.1.5 கோடி கடிகாரம்:
ஆனந்த் அம்பானியின் மணத்தோழனாக இருந்த பாலிவுட் பிரபலங்களுக்கு, ரூ.1.5 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
ஆட்மார்ஸ் பிக்யூட் நிறுவனத்தின் ராயல் ஓக் வகை கைக்கடிகாரங்களான அவை 18 கேரட் இளஞ்சிவப்பு தங்கத்தால் தயாரானவை.
மேலும் நீலக்கல் படிக பின்பக்கத்தைக் கொண்டவை. இதில், கிராண்டே டாபிசெரி வடிவத்தில் ஒளிரும் நேரக்காட்டியும் உண்டு. நாம் எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டின் கால நிலைக்கு ஏற்பவும் இந்தக் கைக்கடிகாரத்தில் நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.
நடிகர்கள் ஷாருக்கான், ரன்வீர் சிங், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் ஆனந்த் அம்பானியின் மணத்தோழனாக செயல்பட்டதால், அவர்களுக்கு இந்த ஸ்பெஷல் கிப்ட் வழங்கப்பட்டது.
* பிசினஸ் மீட்டிங்:
உலகின் சக்தி வாய்ந்த தொழில் அதிபர்கள் பலரும், இந்த திருமணத்தில் ஒன்றாக பங்கேற்றதால், நிறைய தொழில் பகிர்வுகள் நடந்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
•ஊழியர்களுக்கு இனிப்பு:
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, திருமண பரிசாக ஒரு வெள்ளி நாணயமும், அத்துடன் காஜூ கட்லி இனிப்பும், 3 விதமான கார உணவுகளும் கிப்ட் ஹாம்பரில் பரிமாறப்பட்டதாக, இணையத்தில் புகைப்படங்கள் வைரலாகின.
* ஓட்டல் வாடகை:
திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் நடைபெற்றதால், மும்பை நகரில் இருக்கும் அத்தனை ஓட்டல்களும் அறை வாடகையை உயர்த்திவிட்டன.
13 ஆயிரம் ரூபாயை கட்டணமாக வசூலித்து வந்த 3 நட்சத்திர ஓட்டல்களும், திருமண நிகழ்வின்போது தங்களது வாடகையை ரூ.90 ஆயிரத்திற்கு உயர்த்தி விட்டன.
– நன்றி: தினந்தந்தி.