கல்ட் கிளாசிக் அந்தஸ்து கிடைக்கும் சில திரைப்படங்கள் ஒரே இரவில் உருவாகிவிடுவதில்லை.
காலப்போக்கில், புதிய ரசிகர்களை ஈர்த்து, வெளியான பல ஆண்டுகளுக்குப் பிறகும் ரசிகர்களின் மனதில் தனியிடம் பிடிக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு திரைப்படம்தான் ‘மூடர் கூடம்’.
13 ஆண்டுகளுக்கு முன்பு, வித்தியாசமான நகைச்சுவை, வினோதமான கதாபாத்திரங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகியவற்றின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த ‘மூடர் கூடம்’ தற்போது புதிய பரிமாணத்துடன் மீண்டும் திரும்பி வருகிறது.
படத்தின் தலைப்பும், முதல் லுக் போஸ்டரும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் நவீன் ஹிதயத், ஓவியா, சென்றாயன், ராஜாஜி, குபேரன் மற்றும் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல் பாகத்தை இயக்கிய நவீன் ஹிதயத் இரண்டாம் பாகத்தையும் எழுதி இயக்கியுள்ளார்.
இது வெறுமனே சீக்வல் படமாக இல்லாமல், முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தின் தனித்துவமான டார்க் காமெடி மற்றும் கதை சொல்லலை தக்கவைத்துக்கொண்டு, அதிரடி, கற்பனை மற்றும் உலகளாவிய பின்னணியுடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் லுக் போஸ்டரில், பனியால் மூடப்பட்டுள்ள ஒரு பகுதியில் நான்கு ஆயுதம் ஏந்திய கதாபாத்திரங்கள், சாத்தியமற்ற ஒரு பணிக்குத் தயாராக நிற்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் விரிவான களத்தையும், அதிக சவால்களையும் போஸ்டர் காட்டுகிறது.
அதே நேரத்தில், கையில் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு, ‘ஹேப்பி லைஃப்’ என்ற வாசகத்துடன் காட்சியளிக்கும் டெடி பேர், படத்தின் தனித்துவமான நகைச்சுவை உணர்வை காட்டுகிறது.
அதோடு, ‘மிஷன்: பாஸிபிள்’ என்ற சப்டைட்டில், படத்தின் நகைச்சுவையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகும் இந்தப் படம், இத்தாலி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, குரோஷியா, ஸ்லோவேனியா மற்றும் கசகஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் காட்சியமைப்பு மற்றும் விஎஃப்எக்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட அமெரிக்கக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் மூலம், படத்தின் கற்பனை உலகமும், அதிரடி காட்சிகளும் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளன. இதன் மூலம் பார்வையாளர்களுக்கும் சிறந்த திரையங்க அனுபவம் கிடைக்கும்.
ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் பின்னணி இசையமைத்துள்ளார்.
அதியப்பன் சிவா படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், விஜய் ரத்தினம் MPSE ஒலியமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். கே.ஏ. பாட்சா தலைமையிலான சர்வதேசக் குழு, விஎஃப்எக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளது.