‘கேடிஎம்’, ‘பிளிங்க்’, ‘தசரா’, ‘தி கேர்ள் பிரண்ட்’ உள்ளிட்ட சூப்பர் ஹிட் கன்னட மற்றும் தெலுங்குப் படங்களின் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட கதாநாயகன் தீக்ஷித் ஷெட்டி புதிய படம் ஒன்றின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கிறார்.
பான் இந்தியத் திரைப்படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை ஶ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் பேனரில் ஜி. சரவணன் தயாரிக்கிறார்.
மலேசியாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தத் திரைப்படத்தை சாரா இயக்குகிறார். வெங்கி சூரினேனி ஒளிப்பதிவைக் கையாள்கிறார். இதில் நாயகியாக அறிமுகமாகுகிறார் ‘பிக் பாஸ்’ புகழ் ஆயிஷா ஜீனத்.
இப்படத்திற்காக ‘காஸ்ட் அவே,’ ‘கோட் லைஃப்’ போன்ற படங்களுக்கு இணையான அர்ப்பணிப்போடு தீக்ஷித் ஷெட்டி தன் உடலை வருத்தி தத்ரூபமாக நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகுந்த பொருட்செலவில் மலேசியாவில் நடந்து வருகிறது.