மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது. ‘லியோவில் தம்மாத்தூண்டு’ என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனா ஆக்கிவிட்டது என்று விளக்கம் அளித்து பாராட்டியுள்ளார் மன்சூர் அலிகான்.
மேலும், தன் விளக்கத்தில், “லோகி ஒரு திரைச் சித்தன். 3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு, சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்.
சில பாத்திரப் படைப்புக்கள் நீட்ட குறைத்தலின் போது, நாம் ஒன்றும் செய்யமுடியாது.
கேப்டன் பிரபாகரன் 15,000 அடி. ஆனால் எடுக்கப்பட்டது ஒரு லட்சத்து பதினாயிரம் அடி.
என் வாழ்நாளில் 350’க்கு மேற்பட்ட இயக்குனர்களுடன் நான் பணியாற்றி இருந்தாலும், லோகியைப் போன்று வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்று அலட்டிக் கொள்ளாமல் குடும்பம் மறந்து, உடலை வருத்திய படைப்பாளியை பார்த்ததில்லை.
நான் தம்பி விஜயுடன் பல படங்களில் மெயின் வில்லனாக தேவா, நாளைய தீர்ப்பு, மாண்புமிகு மாணவன் என அழிச்சாட்டியம் செய்திருந்தாலும், அந்த காலகட்டம் வேறு!
இப்போது குடும்பம் குடும்பமாக, குழு குழுவாக திரையரங்கை திருவிழாவாக மக்களை மகிழ்விக்க பாடுபட வேண்டியிருக்கிறது.
நான் யதேச்சையாக பேசுவது ஊடகங்களில் பலமாக பரப்படைகிறது. பிணியில் கிடக்கும் நம் மண்ணை மீட்க இனி தன்னலம் மறந்து அரசியல், திரைப் பணியில் என்னை அர்பணிப்பேன்.
என்னுடைய சொந்தப்பட படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி, உடலை வடிவமைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்” என்று மன்சூர் அலிகான் குறிப்பிட்டுள்ளார்.