ஓராண்டுக்குப் பிறகு அரிதாரம் பூசி இருக்கிறார் அஜித்.
கடந்த பொங்கல் திருநாளில் ‘துணிவு’ படம் மூலம் ரசிகர்களுக்கு கரும்பு கொடுத்து விட்டு, உலக ரேஸ் பயணத்தை தொடங்கினார் அல்டிமேட் ஸ்டார்.
அதே பொங்கல் தினத்தில் ‘வாரிசு’ படம் கொடுத்த விஜய், ‘லியோ’ படத்தில் நடித்து முடித்துவிட்டு, வெங்கட் பிரபு படத்தில் நடிக்கக் கிளம்பிச்சென்று விட்டார்.
ஒரு வருடமாக காமிராவில் தலை காட்டாமல் இருந்த அஜித், ஒரு வழியாக தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’யில் இப்போது தீவிரம் காட்டி வருகிறார்.
மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இரட்டை வேடங்களில் நடிக்கும் அஜித்துக்கு திரிஷா, ரெஜினா ஆகியோர் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இது, அஜித்துக்கு 62 – வது படம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.
இந்த நிலையில் அஜித் நடிக்கும் 63 வது படம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
‘மார்க் ஆண்டனி’ படம் மூலம் விஷாலுக்கு புதுவாழ்வு அளித்த இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் படத்தை இயக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன.
‘நேர்கொண்ட பார்வை’ படப்பிடிப்பின்போது ஆதிக் சொன்ன கதை அஜித்துக்கு மிகவும் பிடித்து போயிற்று. கதையை மெருகேற்றச் சொன்ன அஜித், மீண்டும் கதையை கேட்டு ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கால்ஷீட் தருவதாக உறுதி அளித்து விட்டார்.
‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் தொடர்ச்சியாக மூன்று படம், எச். வினோத் இயக்கத்தில் தொடர்ந்து மூன்று படம் நடித்த அஜித், இனிமேல் வேறு வேறு இயக்குநர்கள் படங்களில் நடிப்பது என முடிவு எடுத்து, அதன் ஒரு பகுதியாக மகிழ் திருமேனிக்கு தேதிகள் அளித்தார்.
இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.
‘விடுதலை’ படத்தைத் தயாரித்த எல்ரெட் குமார், அஜித்தின் புதிய படத்தை தயாரிக்க உள்ளார். விடாமுயற்சிக்கு 105 கோடி ரூபாய் அஜித் சம்பளம் வாங்கி இருக்கிறார்.
ஆதிக் இயக்கும் அஜித்தின் 63-வது படத்துக்கு அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாம். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.
புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் ‘தல’
– பாப்பாங்குளம் பாரதி.
—