ஜெயிலர், ஜவான், லியோ, அயலான், கோட், கல்கி, புஷ்பா-2 ஆகிய திரைப்படங்கள் உட்பட உலகளாவிய திரைப்படங்களை பிரான்ஸ் நாட்டில் வெளியிடும் நிறுவனமான Friday Entertainment சார்பாக ஜெயந்தன் தயாரித்திருக்கும் படம் ‘டிராக்டர்’.
இயக்குநர் ரமேஷ் யந்த்ரா இயக்கிய இந்த ‘டிராக்டர்’ படம் முதன் முதலில் பிரேசிலில் உள்ள 48 வது São Paulo International Film Festival லில் புதுமுக இயக்குநர் பிரிவில் Asian premiere ஆக கடந்த அக்டோபர் மாதம் திரையிடப்பட்டது.
இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா ஏற்கனவே ‘குடியம் குகைகள்’ மற்றும் ‘இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை’ ஆகிய ஆவணப்படங்களால் அறியப்பெற்றவர். சென்னை ஓவியக் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவரும் ஆவார். இது அவரது முதல் திரைப்படம்.
ஆசிய அளவில் வேறு எங்கும் திரையிடப்படாத இந்த ‘டிராக்டர்’ திரைப்படம் தற்போது நடைபெற்று வரும் 22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் உலக சினிமா பிரிவில் டிசம்பர் 14 ஆம் தேதி PVR – சத்தியம் திரை அரங்கில் 11:30 மணிக்கு திரையிடப்பட உள்ளது.
இந்த ‘டிராக்டர்’ திரைப்படம் நமது விவசாயிகளின் படிப்பறிவு இல்லாத நிலையை பயன்படுத்தியும், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என சொல்லி தனியார் கம்பெனிகள் செய்துவரும் ஏமாற்று வேலைகளையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் ஜெயந்தன் தனது ஃப்ரைடே எண்டர்டெயின்மென்ட் (பிரான்ஸ்) மூலமாக திரைப்படத் தயாரிப்பில் முதல் முயற்சியாக தயாரித்த படம் இந்த டிராக்டர்.
இந்தத் திரைப்பட குழுவினர் பெரும்பாலும் அறிமுகக் கலைஞர்கள். இயக்குநரைப் போலவே இந்தப் படத்தின் நாயகன் பிரபாகரன் ஜெயராமன் மற்றும் நாயகி ஸ்வீதா பிரதாப் இருவரும் IT துறையைச் சேர்ந்தவர்கள்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர்களாக அறிமுகமாகிறார்கள். துணைக் கதாபாத்திரத்தில் சமீபத்தில் மறைந்த பிள்ளையார்பட்டி ஜெயலட்சுமி, சிறுவன் கோவர்தன் மற்றும் இயக்குநர் ராம்சிவா ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு கௌதம் முத்துசாமி ஒளிப்பதிவாளராகவும், R.சுதர்சன் படத்தொகுப்பாளராகவும், ஒலி வடிவமைப்பை ராஜேஷ் சசீந்திரன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை பிரபல கலை இயக்குநர் டி.முத்துராஜ் செய்துள்ளார்கள்.
பாரம்பரியமான நமது விவசாயத்தை இன்றைய கார்ப்ரேட் நிறுவனங்கள் எப்படி அழிக்கின்றன என்பதை மக்களுக்கு உரக்கச் சொல்ல வரும் இந்த ‘டிராக்டர்’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது.