தந்தை இடத்திலிருந்து தம்பியை வாழ்த்துகிறேன்!

- நடிகர் அதர்வா முரளி

 ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா!

விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய நயன்தாரா: நேசிப்பாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல்.

இயக்குநர் விஷ்ணு வர்தன்: காஷ்ட்யூம் டிசைனராக அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி.

ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்” என்று வாழ்த்திவிட்டு படத்தில் ஆகாஷ் முரளியின் ஃப்ர்ஸ்ட் லுக்கை லான்ச் செய்தார்.

நடிகர் ஆர்யா: “எனக்குப் பிடித்த இயக்குநர் விஷ்ணு இயக்கத்தில் ஆகாஷ் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. இது எங்களுக்கு குடும்ப நிகழ்வு போலதான். படக்குழுவுக்கு வாழ்த்துகள்” எனச் சொல்லி ’நேசிப்பாயா’ படத்தில் அதிதியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிமுகப்படுத்தினார்.

நடிகை அதிதி: “என்னுடைய முதல் காதல் கதை இது. எல்லோருக்கும் பிடிக்கும். ஆகாஷூக்கு முதல் படம். சிறப்பாக செய்திருக்கிறார். முரளி சார், அதர்வா சார் மற்றும் எனக்கு கொடுத்த அன்பும் ஆதரவும் ஆகாஷூக்கும் கொடுங்கள். இந்த இண்டஸ்ட்ரியில் எனக்கு மிகவும் பிடித்த நயன் மேம் மற்றும் ஆர்யா சார் இருவரும் இந்த நிகழ்வை சிறப்பித்துக் கொடுத்ததற்கு நன்றி”.

இயக்குநர் விஷ்ணு வர்தன்: “விழாவிற்கு வந்துள்ள நயன், ஆர்யா, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ சார், சிநேகா எல்லோருக்கும் நன்றி. இந்தப் படம் ஒரு லவ் டிராமா. கதையில் ஆக்‌ஷனும் உள்ளது. ஆகாஷூக்கு இது முதல் படம் போல இல்லாமல் சிறப்பாக நடித்துள்ளார். அதிதி பயங்கர எனர்ஜியாக உள்ளார். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்”.

அதர்வா முரளி: “என்னுடைய குடும்பத்திற்கு சந்தோஷமான, அதே சமயம் எமோஷனலான நாள் இது. ஆகாஷூக்கு முதல் படத்திலேயே பிரிட்டோ சார் போன்ற ஒரு தயாரிப்பாளர் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆகாஷ் கனவுக்கு வடிவம் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவுக்கு நன்றி.

என்னுடைய முதல் படமான ‘பாணா காத்தாடி’யில் யுவன் இசைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்தேனா அதேபோலதான், ஆகாஷூக்கும். நான் அறிமுகமாகும் போது அப்பா இருந்தார். அந்த சமயத்தில் அவர் என்ன யோசித்திருப்பார் எனத் தெரியவில்லை.

ஆனால், ஆகாஷ் மேடையில் பேசுவதை நான் கீழிருந்து பார்க்கும்போதுதான் எனக்கு அப்பாவின் மனநிலை புரிகிறது. ரொம்பவே எமோஷனலாக இருக்கு. அப்பாவின் கடைசி தருணத்தில் அம்மா, அக்கா, நான் என எல்லோருமே எமோஷனலாக இருந்தோம்.

அப்போ ஆகாஷ் சின்ன பையன். பாத்துக்கலாம் அண்ணா என எனக்கு ஆறுதல் சொன்னார். இப்போ அவர் ஹீரோவாக அறிமுகம் ஆவது மகிழ்ச்சி. அப்பாவுக்கும் எனக்கும் என்ன அன்பும் ஆதரவும் கொடுத்தீர்களோ அதைவிட ஒருபடி மேலே என் தம்பிக்கு நீங்கள் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்”. என அதர்வா நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

Comments (0)
Add Comment