சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘மெய்யழகன்’.
பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி, ஜேபி உட்பட பலர் நடித்துள்ளனர்.
கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். வரும் 27-ம் தேதி வெளியாகும் மற்றும் இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இதைப் பற்றி பேசிய நடிகர் கார்த்தி, “மெய்யழகன் கதையைப் படித்தபோது 6 இடங்களில் எனக்குக் கண்ணீர் வந்தது.
எல்லோருக்குமே ஒரு தேடல் இருக்கிறது. தீபாவளி, பொங்கல் காலங்களில் சென்னையில் இருந்து எல்லோருமே ஊருக்குச் செல்கிறார்கள். சென்னையே காலியாகி விடுகிறது.
அந்த அளவுக்கு மக்கள் சொந்த ஊரை நேசிக்கிறார்கள். இந்தப் படமும் அப்படியொரு அற்புதமான அனுபவத்தை உங்களுக்குக் கொடுக்கும்.
‘கைதி’ படத்தில் நடித்தபோது முழுவதும் இரவு நேர படப்பிடிப்பு தான். லோகேஷ் கனகராஜ் சண்டைக் காட்சிகளாகக் கொடுத்து பெண்டு நிமிர்த்தி விட்டார்.
அதற்கடுத்து இந்தப் படத்தில்தான் இரவு நேரக் காட்சிகள் அதிகம். ஆனால் இதில் சண்டைக் காட்சியே இல்லை.
‘இந்தக் காட்சிகளில் இருக்கும் உணர்வுகளைக் குறையாமல் திரையில் கொண்டு வந்தாலே இந்தப் படத்துக்குப் பெரிய வெற்றியாக இருக்கும்’ என்று நானும் அரவிந்த் சாமி சாரும் பேசிக்கொண்டோம்.
இந்தப் படம் முழுவதும், அத்தான் அத்தான் என அரவிந்த் சாமியை டார்ச்சர் செய்யும் கதாபாத்திரம் எனக்கு. சுவாரஸ்யமாக இருக்கும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் சாமி, தேவதர்ஷினி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.