எடிட்டர் B. லெனினின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டினை பாட்டுத் திருவிழாவாகப் படக்குழுவினர் கொண்டாடினர். விழாவில் தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது.
இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள்.
பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார்.
சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும். நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.
ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்குச் சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு.
இது மாதிரியான சின்னப் படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத் தரும். என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம்.
கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன். அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும். ஆனால், அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன். அது மட்டும் போதுமா? இப்போது நான் மதன் கார்கியோடு போட்டி போடுகிறேன்.
அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன், விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால், எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப் படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார்.
அவருக்கு இந்தப் படத்திற்குத் தேசிய விருது கிடைக்க வாழ்த்துக்கள். நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார் கணேஷ்பாபு. அவர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார்.