சிகிச்சைக்கு உதவிய ஜி.வி. பிரகாஷ்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர். தற்போது நிறைய படங்களில் நடித்தும், இசையமைத்தும் வருகிறார்.

இவரது இசையில் தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’, விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. இதனிடையே ஜி.வி.பிரகாஷ் குமார் பொது விஷயங்களிலும் தனது கருத்துக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

சமூகத்தில் நிலவும் அநியாயங்களுக்கு குரல் கொடுப்பதும், அவ்வப்போது உதவி கேட்போருக்கு தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்தும் வருகிறார்.

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒருவர் தங்களது ஒரு வயது குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், உதவி கேட்டு சமூக வலைத்தளமான ‘X’ தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில், “ஆன்லைனில் பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு, இருந்தாலும் கேக்குறேன். ஒரு வயதான என் அக்கா பையனுக்கு சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு சொல்றாங்க. கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.

நேற்று ராமநாட்டிலிருந்து மதுரை அப்போலோ மருத்துவமனை கூட்டிட்டு போனோம். ஆனா அவங்க உடனே ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க. 4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க.

எங்க குடும்பப் பக்கத்தில் இருந்து 2 லட்சம் வரை தயார் பண்ணிட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தா கூட அங்க இங்கன்னு எப்படியாச்சும் ரெடி பன்னிருவேன். உடனே பண்ண சொல்றாங்க. உங்களால எதாச்சும் முடிஞ்சா பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்” என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் உதவிச் செய்து வந்த நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் ரூ.75 ஆயிரம் பணத்தை அந்த நபருக்கு அனுப்பியிருக்கிறார். இதனைத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ‘என்னுடைய சிறு உதவி’ என்று பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் ஜி.வி பிரகாஷின் இந்தச் செயலுக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

– தேஜேஷ்

Comments (0)
Add Comment