ஆஸ்கர் விருதுக் குழுவில் உறுப்பினரான ராஜமவுலி!

ஆஸ்கர் அகாடமி, ஒவ்வொரு வருடமும் புதிய உறுப்பினர்களைத் தேர்வுக் குழுவில் சேர்த்து வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டில் புதிய உறுப்பினர்களாக செயல்பட, 57 நாடுகளில் இருந்து 487 கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியக் கலைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ராஜமவுலி, அவர் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான ரமா ராஜமவுலி, ஆஸ்கர் விருதுவென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி, இயக்குநர் ரீமா தாஸ், தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி, ஆடை வடிவமைப்பாளர் ஷீதல் ஷர்மா என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து அழைப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், ஆஸ்கர் அகாடமியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 10,910 ஆக உயரும் என்றும் அதில், 9,934-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆஸ்கர் அகாடமியில் இயக்குநர் மணிரத்னம், நடிகர் சூர்யா, ஏ.ஆர். ரஹ்மான் ஏற்கெனவே உறுப்பினர்களாக உள்ளனர்.

– நன்றி: இந்து தமிழ் திசை.

Comments (0)
Add Comment