தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். 1961-ம் ஆண்டு வெளியான ஸ்ரீவள்ளி என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான விஜயகுமார், ஒரு சில படங்களில் நாயகனாக நடித்திருந்தாலும், பல படங்களில் வில்லன், குணச்சித்திரம் என முக்கிய கேரக்டரில் நடித்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார்.
ஒரே படத்தில் விஜயகுமார் தனது மகன் மற்றும் பேரன் ஆகியோருடன் இணைந்து நடித்த முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
தற்போது திரைப்படங்களில் முக்கிய கேரக்டர் மற்றும் சீரியல்களில் நடித்து வரும் விஜயகுமார் சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் கடும் இன்னல்களைச் சந்தித்துள்ளார்.
1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல்ஹாசன் அடுத்தடுத்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களிலல் நடித்திருந்தார்.
ஆனால், அடுத்து 1961-ல் அறிமுகமான விஜயகுமாருக்கு போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை.
சினிமா வாய்ப்பு இல்லாததால் நாடகங்களில் நடித்து வந்த விஜயகுமார், பிரபல இயக்குநர் ஏ.பி.நாகராஜன் இயக்கும் கந்தன் கருணை படத்தில் முருகன் வேடத்தில் நடிக்க ஒருவரை தேடிக்கொண்டிருப்பதாக தகவல் கிடைக்க, உடனடியாக அங்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது அவருக்கு முன்பே முருகன் வேடத்தில் நடிக்க ஒருவர் அங்கு வந்திருந்தார். அவருக்கு மேக்கப் போடப்பட்ட நிலையில், அடுத்து விஜயகுமாருக்கு மேக்கப் போட தொடங்கப்பட்டுள்ளது.
அப்போது விஜயகுமாருக்கு மார்பு முழுவதும் முடியாக இருந்ததால், அதை எடுத்துவிட்டு வருமாறு படக்குவினர் ஒரு பிளேடை கொடுக்க, ஆர்வத்தில் சென்ற விஜயகுமார் நெஞ்சில் பல இடங்களில் கிழித்துக்கொண்டுள்ளார்.
நெஞ்சு முழுவதும் ரத்தமாக இருந்ததாலும், நடிப்பின் மீதுள்ள ஆசையால், உடனடியாக அதை துடைத்துக்கொண்டு வந்தார்.
மேக்கப் போடப்பட்டு, அவருக்கு முன்பு வந்த நபரும், விஜயகுமாரும் ஒரு காரில் ஏறி படப்பிடிப்பு தளத்திற்கு புறப்பட்டனர்.
அப்போது காரில் இருந்த நபர் விஜயகுமாரை பார்த்து, “நீங்கள் பாலக்காடா என்று கேட்க, இல்லை நான் தமிழன், தஞ்சை மாவட்டம்.
நீங்கள் எந்த ஊர் என்று கேட்க, நான் கோயம்புத்தூர். அப்பா இல்லை அம்மா மட்டும் தான். இங்க தங்கி ஓவியம் படித்து வருகிறேன் என்று கூறியுள்ளார். அவர் தான் நடிகர் சிவகுமார்.
இந்த பேச்சு விஜயகுமார் – சிவகுமார் இடையே நட்பை அதிகரித்த நிலையில், இந்த பட வாய்ப்பு சிவக்குமாருக்கே கிடைக்கட்டும் என்று விஜயகுமார் நினைத்துள்ளார்.
அதன்படியே கந்தன் கருணை படத்தில் சிவகுமார் முருகன் வேடத்தில் நடித்திருந்தார்.
பட வாய்ப்பு இல்லாததால் ஊருக்கு சென்றுவிட்ட விஜயகுமாருக்கு, முத்துக்கண்ணு என்பருடன் திருமணமாகியது.
அப்போது மு.க.முத்து நடித்த ஒரு படத்தை பார்த்த விஜயகுமாருக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்து, அவரின் அப்பாவிடம் பேசியுள்ளார்.
ஆனால் அவர் ஒப்புக்கொள்ளாத நிலையில், “ஒரு வருடம் மட்டும் டைம் கொடுங்கள். வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அடுத்த வருடம் முதல் நாளில் நான் இங்கு இருப்பேன்” என்று கூறியுள்ளார். இதை கேட்ட அவரது தந்தை பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு சினிமா வாய்ப்பு தேடி மீண்டும் சென்னை வந்த விஜயகுமாருக்கு பல வாய்ப்புகள் கிடைத்து, இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்