தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை, டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து விருதாளர்களுக்குத் தங்கப் பதக்கம், சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ஆர். மாதவனுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக ஜோதிகாவிற்கும்,
சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு ‘வை ராஜா வை’ திரைப்படத்திற்காக கௌதம் கார்த்திக்கும், சிறந்த நடிகை சிறப்புப் பரிசு ‘இறுதிச்சுற்று’ திரைப்படத்திற்காக ரித்திகா சிங்கிற்கும் வழங்கப்பட்டது.
இதேபோல், சிறந்த நகைச்சுவை நடிகர் விருது ‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்திற்காக சிங்கம்புலிக்கும், சிறந்த நகைச்சுவை நடிகை விருது ‘திருட்டுக் கல்யாணம்’ மற்றும் ‘36 வயதினிலே’ திரைப்படத்திற்காக தேவதர்ஷினிக்கும்,
சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருது ‘அபூர்வமகான்’ திரைப்படத்திற்காக தலைவாசல் விஜய்க்கும், சிறந்த குணச்சித்திர நடிகை விருது ‘பாபநாசம்’ திரைப்படத்திற்காக கௌதமிக்கும் வழங்கப்பட்டது.