வங்காளத்தைத் தாயகமாகக் கொண்ட ஒருவர், தமிழ்ப் படப்பிடிப்பில் சூரராக விளங்குகிறாரென்றால் அது வியப்பளிக்கும் விஷயந்தானே?
பிரபல ஒளிப்பதிவாளரான (கேமரா மேன்) நிமாய் கோஷ் கிழக்கு வங்காளத்தில் டாக்கா என்ற ஊரில் 1914ல் பிறந்தார். வங்காள மண்ணில் பிறந்தவர்களென்றால் கொஞ்சமாவது கலை ஞானம் இல்லாதிருக்கமாட்டார்கள்.
நிமாய்க்கு சிறுவயது முதலே படப் பிடிப்புக் கலையில் பற்று அதிகம். ஆனால் அவர் தந்தையோ கோஷ் ரேடியோ இன்ஜினியராக விளங்க வேண்டுமென்று ஆசைப்பட்டார்.
ஏனென்றால் அந்த ஊரில் ரேடியோ நுட்பம் தெரிந்தவர்கள் அபூர்வமாயிருந்தார்கள். இந்தத் தொழிலைத் தெரிந்துகொண்டால் நிறைய சம்பதிக்கலாமே என்ற சபலந்தான் தந்தைக்கு.
கோஷ் கல்லூரியில் படிக்கும்போது கூட, பள்ளிப் புத்தகங்களைத் தள்ளி வைத்தவிட்டு போட்டோ கலை சம்பந் தப்பட்ட புத்தகங்களையே ஆர்வமுடன் படித்தார். ஒரு சின்னக் காமிராவை வாங்கி, தாமே படம் பிடித்து கழுவி, பிரதிகள் எடுத்து அபிவிருத்தி றால் செய்து வந்தார்.
சினிமா ஒளிப்பதிவாளர்கள் அசோக் சென், தேவி கோஷ் முதலியோரை அணுகி சினிமாப் படப்பிடிப்பு பற் றிய விஷயங்களை அறிந்துகொண்டார். இளைஞன் கோஷின் படப் பிடிப்பு அனுபவங்களையும் ஆர்வத்தையும் அறிந்த தேவி கோஷ், அவரைத் தமக்கு உதவியாளராக அமர்த்திக் கொண்டார்.
பதினெட்டாவது வயதில் இத்தொழிலில் பிரவேசித்த கோஷ் ஒரே ஆண்டில் ஒளிப்பதிவாளராக உயர்ந்து விட்டாரென்றால், அவர் எவ்வளவு தீவிரமாக உழைத்தார் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
ஆரோரா மூலம் இந்திய சர்க்காருக்குத் தேவையான விளம்பரப் படங்களை நிறையத் தயாரித்துக் கொடுத்தார். இதில் “லேடி பேடன் பவலின் இந்திய விஜயம்” என்ற செய்திப் படம் இவருக் குப்புகழைக் கொண்டுவந்தது. ஆண்டுகள் பலவாகியும் இன்னும் இந்தப் படம் ஒளிப்பதிவுத் திறமைக்கோர் எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது.
கோஷ் முதன்முதலாக எடுத்த முழு நீளப் படம் “வீப்ர நாராயணா”வாகும். இது கல்கத்தாவில் தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்டது. காஞ்சனமாலா, வெங்கட சுப்பையா முதலியோர் நடித்த பழைய கலர்ப் படம் இது.
இந்தப் படம் எடுத்தபிறகு கோஷ் உடல்நலம் பாதிக்கப்படவே ஓய்வெடுத்துக்கொண்டார். தந்தை விடவில்லை. தனயனைக்கொண்டு ரேடியோக் கடை ஒன்றை ஆரம்பித்தார்.
ஆனால் கோஷுக்கு இது பிடிக்கவில்லை – மற்ற சகோதரர்களிடம் விட்டுவிட்டு மேலும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பதில் கழித்தார்.
உடம்பு குணமானதும் “பிரதிமா” என்ற வங்காள மொழிப் படத்தின் ஒளிப்பதிவைக் கவனித்தார். ஆனால், இவருக்கு இது திருப்தியைத் தரவில்லை. தமது முழுத் திறமையையும் காட்ட சொந்தத்தில் ஒரு படம் எடுக்கத் துணிந்தார்.
அதன் பெயர் “சின்ன மூல்” – அதாவது “அடி பெயர்ந்தது”. 1949ல் வெளிவந்த இந்த வங்காளிப் படம் மகத்தான வெற்றிபெற்றது. கிழக்கு, மேற்கும் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பொழுது அகதிகள் பட்ட இன்னலைப் பின்னிய இச்சோகக் கதை இன்றும் வட இந்திய ரசிகர்களால் மறக்கமுடியாதது!
“சின்னமூல்” படத்தின் வெற்றிக்கான காரணம் என்ன? கோஷ் கூறுவதைக் கேளுங்கள் :
இந்தப் படத்தில் நட்சத்திர நடிகர், நடிகையர்களே கிடையாது.
இந்தப் படத்தின் உற்பத்திச் செலவில் பாதித் தொகை அமெச்சூர் நாடகக் குழுவிடமிருந்து வசூலிக்கப் பட்டது. மற்றொரு பாதித் தொகை நாடு, வீடு இழந்த அகதிகளிடமிருந்து (அவர்களின் நன்மைக்காகவே) பெற்றேன்.
படத்தில் எந்தக் கதாபாத்திரத்திற்கும் ‘மேக் அப்’ என்பதே கிடையாது. இதுவே ‘மேக் அப்’ இல்லாது வெளிவந்த முதல் இந்தியப் படம்.
படத்தின் 75 சதவிகிதக் காட்சிகள் சம்பவங்கள் நடந்த இடங்களிலேயே இயற்கைப் பின்னணியுடன் நேரில் சென்று படமாக்கப்பட்டது.
இம்மாதிரி அரும்பாடுபட்டு எடுக்கப்பட்ட இப்படம் 1951ல் சோவியத் ரஷ்யாவில் இந்திய அரசாங்கத்தின் மூலம் திரையிடப்பட்டு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இப்படத்தை நல்ல முறையில் எடுத்த கோஷை ரஷ்யா வரவேற்றது.
இந்தியக் கலாச்சாரக்கோஷ்டியுடன் கோஷ் சென்றார். இவர் ரஷ்யா சென்றிருந்த சமயத்தில் தான் அங்கு நமது தென்னாட்டுப்பிரதி நிதிகளாகிய காலஞ்சென்ற திரு என்.எஸ். கிருஷ்ணன், டைரக்டர் திரு.கே. சுப்ரமணியம் இவர்களைச் சந்தித்தார்.
திரு. கே. சுப்ரமணியமும் என். எஸ். கே.யும் நிமாய் கோஷ் அவர்களை தென்னாட்டிற்கு வந்து பணிபுரிய அழைத்தனர். சென்னைக்கு வந்த கோஷ் அவர்கள் முதன் முதலில் (1952ல்) ஒளிப்பதிவு செய்தது “பொன் வயல்” என்ற தமிழ்ப் படமாகும். பிறகு நெப்டியூன் ஸ்டூடியோ வினரால் ஒப்பந்தம் செய்யப்பட்டு “இன்ஸ்பெக்டர் “ரத்தபாசம்” ஆகியபடங்கள் வெளிவந்தன.
“கோமதியின் காதலன்”, சமீபத்தில் வெளியான “அவன் அமரன்” ஆகிய படங்களையும் தனிப்பட்ட முறையில் ஒளிப்பதிவாளராக இருந்து படமாக்கினார்.
தற்சமயம் “நாலு வேலி நிலம்”, “மகனே கேள்”, பாலா ‘மூவிஸின் வங்காள மொழிப் படம், மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருகிறார்.
கலைஞர்களுக்கு நாடு, மொழி, என்ற பேதமில்லை. அதற்கு எடுத்துக் காட்டு திரு. கோஷ் அவர்கள். அவரது பணியைப் பாராட்டுவதோடு, அவரிடமிருந்து இன்னும் பல சிறந்தப் படங்களை எதிர்பார்ப்போம்.
-நன்றி: இந்தியன் மூவி நியூஸ்