நாகேஷ் இடத்தை இட்டு நிரப்பிய சுருளிராஜன்!

தமிழ் சினிமாவில் சந்திரபாபுவுக்கு அடுத்தபடியாக காமெடியில் உச்சம் தொட்டு ரசிகர்களை மகிழ்வித்தவர் நாகேஷ்.

இவரின் காலத்திற்குப் பின் அதாவது 1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி ரசிகர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர்தான் சுருளிராஜன். கவுண்டமணிக்கு முன்னதாக இவரது காலம் தான் காமெடியில் கொடிகட்டிப் பறந்தது.

திரையில் தோன்றினாலே சிரிப்பு வரும் அளவிற்கு நடிப்பில் வெளுத்து வாங்கும் ஒரு சிரிப்பு நடிகர் யாரென்றால் அது சுருளிராஜன் தான்!

திருநங்கை, பிச்சைக்காரர், கழிவு அகற்றும் தொழிலாளி, பிண ஊர்தி ஓட்டுபவர் போன்ற பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார்.

அவரின் மறைவுக்குப் பின்னால் உச்சத்துக்கு வந்த கவுண்டமணி இம்மாதிரி கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

சுருளிராஜன் 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமாகியிருந்தாலும் 1975 வரை அவரும் மற்ற நகைச்சுவை நடிகர்களைப் போன்றே நடித்துக் கொண்டிருந்தார்.

1980 ஆம் ஆண்டில் மட்டும் அவர் கிட்டத்தட்ட 50 படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை நடிகராக நடித்தார். இதில் பெரும்பாலான வேடங்கள் அடித்தட்டு, விளிம்புநிலை கதாபாத்திரங்களே.

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சுருளிராஜன் முதலில் அறிமுகமான படம் இரவும் பகலும் படம் என்றாலும் எம்.ஜி.ஆரின் எங்க வீட்டு பிள்ளைப் படத்தில் வரும் நான் ஆணையிட்டால் பாடலில் வீட்டு வேலைகாரர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

இந்த இரு படங்களும் 1965 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியானது. ஆனால் இரவும் பகலும் படத்தில் சுருளிராஜனின் பெயர் டைட்டில் கார்டுல் இடம் பெறவில்லை.

சுருளிராஜன் முதல் படத்திலே எம்.ஜி.ஆருடன் நடித்திருந்தாலும் எங்க வீட்டுப் பிள்ளை படத்திற்கு பிறகு எம்.ஜி.ஆரின் கடைசி படமான மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் வரை இருவரும் சேர்ந்து ஒரு படமும் பணிபுரியவில்லை.

மாந்தோப்புக் கிளியே என்ற படத்தில் அவர் ஏற்று நடித்த கஞ்சப் பிரபு வேடத்தை சுருளிராஜனின் மாஸ்டர் பீஸ் எனலாம். பனையோலை விசிறி பிய்ந்துவிடும் என அதை நிலையாக வைத்து உடலை விசிறிக்கொள்வதும், விளக்கு இல்லாத நேரத்தில் உடை அழுக்காகிவிடும் என அவிழ்த்து வைப்பதுமாய் அதகளப் படுத்தியிருப்பார்.

உச்சமாக ஐந்து கிலோ அரிசிக்காகவும், பணத்துக்காகவும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வார்.

இவ்வாறு மக்களை சிரிக்க வைத்த மகா கலைஞன் தனது திரையுலகப் பயணத்தை தனது 42 வயதிலேயே முடித்துக் கொண்டார்.

நன்றி: ஜான் அழகர் முகநூல் பதிவு

Comments (0)
Add Comment