Take a fresh look at your lifestyle.

ரசிகர்களின் ரசனையை வெல்வாரா தேசியத் தலைவர்?

102

முத்துராமலிங்கத் தேவராக பஷீர் என்பவர் நடிக்க, பாரதிராஜா, ராதாரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில், அரவிந்தராஜ் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம்.

தயாரித்திருப்பது லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகனான எஸ்.எஸ்.ஆர். சத்யா மற்றும் ஜெனிஃபர் மார்கரெட்.

இம்மானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்பட்டதற்கான வழக்கின் விசாரணையின் போது, தேவருக்கு எதிரான தரப்பில் வாதாடும் வக்கீல்கள் தரப்பில் பணியாற்றி,

பின்னர் தேவரின் பெருமைகளை உணர்ந்த ஒரு வக்கீல், தற்போது தனது ஜூனியர் வக்கீல்களிடம் தேவரின் வாழ்வைச் சொல்வதாகப் படம் போகிறது. வக்கீலாக இயக்குநர் அரவிந்தராஜ்!

சிறுவயதிலேயே தேவர், அம்மாவை இழந்து இஸ்லாமியப் பெண்மணியிடம் பால் குடித்து வளர்ந்தது, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தது, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டது,

சர்தார் வல்லப பாய் பட்டேலைப் பின்பற்றியது, வைத்தியநாத அய்யர் ஆசைப்படி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தாழ்த்தப்பட்டவர்களின் ஆலயப் பிரவேசத்தை பல பிராமணர்கள் எதிர்ப்பையும் மீறி நடத்திக் காட்டியது,

சொத்து வரிக் கட்டாதவர் ஓட்டுப் போடவோ தேர்தலில் நிற்கவோ முடியாது என்ற அன்றைய நிலையில், சொத்து ஏதும் இல்லாத காமாரஜரை எப்படியாவது தேர்தலில் நிற்க வைக்க,

முத்துராமலிங்கத் தேவரே காமராஜர் பெயரில் இரண்டு ஆடுகள் வாங்கி, அதைக் காமராஜரின் சொத்தாகக் காட்டி, காமராஜர் தேர்தலில் நிற்க உதவியது,

பின்னர் காமராஜருக்கும் தேவருக்குமே முரண்பாடு வந்து இரண்டு அணிகளாக நின்றது, அதனால் நாடார்களுக்கும் முக்குலத்தோருக்கும் ஏற்பட்ட மோதல்கள்,

குற்றப் பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களை அந்த கோரப்பிடியில் இருந்து விடுவித்து அவர் செய்த சாதனை,

நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு தென்னகத்தின் தளபதியாக முத்துராமலிங்கத் தேவர் இருந்தது, நேதாஜியின் அம்மாவை சந்தித்தது, நேதாஜி இறந்துபோது வருந்தியது, நேதாஜிக்கு எதிராக நேரு செயல்பட்டதாக தேவர் குற்றம் சாட்டியது,

நேதாஜி உயிரோடு இருக்கிறார் என்று தேவர் தனக்கு வந்த செய்தியைச் சொல்ல, அவர் மீது நேரு கோபம் கொண்டது,

தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இமானுவேல் கொலை வழக்கில் முத்துராமலிங்கத் தேவர் தரப்பு என்ன என்பது,

தேவர் ஜெயிலில் ஸ்லோ பாய்சன் கொடுக்கப்பட்டதால் உடல் நலிவுற்றாரா என்ற கேள்வி,

மருத்துவமனையில் அவர் ஆங்கில மருத்துவத்தையும் பெண் நர்ஸ்கள் தன்னை தொடுவதையும் மறுத்தது, (இந்தக் காட்சியில் எஸ்.எஸ்.ராஜேந்திரனாக அவர் மகனும் படத்தின் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.ஆர். சத்யாவே நடித்துள்ளார்)

உட்கார வைக்கப்பட்ட நிலையில் ஜோதியால் எரிக்கப்பட்டு குரு பூஜை செய்யப்படும் தெய்வத்தன்மை கொண்டவராக முத்துராமலிங்கத் தேவர் ஆனது  என எண்ணற்ற நிகழ்வுகள் படத்தில் இருக்கின்றன.

முத்துராமலிங்கத் தேவர் விடுதலை செய்யப்படும் வழக்கில் நீதிபதியாக பாரதிராஜா, அவர் தரப்பு வக்கீலாக ராதாரவி, தேவரின் விசுவாசிகளாக வாகை சந்திரசேகர், எஸ்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது நடிப்பு சிறப்பு.

அந்த காலக்கட்ட காட்சிகளை சிறப்பாகக் இயக்கியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த ராஜ்.

இதுபோன்ற படங்களுக்கு இசை அமைக்க தன்னை விட்டால் ஆளே இல்லை என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. அவர் மட்டும் இல்லாவிட்டால் ஒரு டாக்குமெண்டரி உணர்வே வந்திருக்கும்.

கலை இயக்கம், அந்தக் கால உடைகள் நேர்த்தி.

தேவரின் அபிமானிகள் சிலிர்க்கவும் மட்டுமின்றி பொதுவான தரப்பினர் நெகிழவும் சில காட்சிகள் உள்ளன.

காந்தியாகவும் நேருவாகவும் நடித்து இருப்பவர்களின் தோற்றப் பொருத்தம் அருமை. காமராஜருக்கு எதிராக வந்திருக்கும் முதல் படம் இது.

நேருவை வில்லன் போலவே காட்டுகிறார்கள்.

இமானுவேல் கொலை வழக்கில் தேவரின் தரப்பு மட்டுமே சொல்லப்படுகிறது.

இமானுவேல் கொலை, தேவருக்கு தெரியாமல் நடந்தது என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு தேவர் சந்தோஷப்படுவார் என்று எண்ணி அவரது விசுவாசிகள் செய்தது என்பதும் உண்மை என்கிறார்கள்.

அன்றைய கலெக்டர் பணிக்கர் தலைமையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை குழுவில் இமானுவேல் சேகரன் மற்றும் நாடார் தரப்பு நபர்கள் வந்த பிறகு தேவர் வருவார் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது என்றும்,

ஆனால் இம்மானுவேல் சேகரன், முத்துராமலிங்கத் தேவர் வந்த பிறகே வந்ததோடு, கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தது பிடிக்காத தேவர்,

பிறகு, “என் முன்னால் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த அவனை சும்மா விடக்கூடாது” என்று சொன்னார் என்று, தேவருக்கு வெப்பு நோய்க்கு சிகிச்சை அளித்த ஒரு வைத்தியரே சாட்சி சொன்னது வரலாறு.

உண்மையில் அப்போது கலெக்டராக இருந்த பணிக்கர் என்பவர், தென் தமிழ்நாட்டில் தேவர்களும் நாடார்களும் தாழ்த்தப்பட்டவர்களும் ஒற்றுமையாக இருந்தால் அது தென் மாவட்டங்களில் செட்டில் ஆக வரும் மலையாளிகளுக்கு பாதகம் ஆகும் என்பதால் அந்த ஒற்றுமை வரக்கூடாது என்பதில் பணிக்கர் தீர்மானமாக இருந்தார் என்பார்கள்.

அந்த முக்கியமான இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் எல்லாம் படத்தில் இல்லை.

தேவரின் சொத்து அவரிடம் வேலை செய்த தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது. அவர்களில் சில தாழ்த்தப்பட்ட மக்களும் உண்டு என்கிறது படம்.

(ஆனால் அந்த சொத்துகளில் சில பின்னர் அவர்களிடமிருந்து காசு கொடுத்து வாங்கப்பட்டது. சிலர் திருப்பிக் கொடுத்து விட்டார்கள் என்று ஒரு தகவல் உண்டு)

பசும்பொன் தேவரின் வரலாற்றுக்கு உரிய அழுத்தமான படமாக்கல் இல்லாமை, இணைப்பு இல்லாமல் சிதறிச் சிதறிப் போகும் காட்சிகள், தெறிப்பு இல்லாத வசனங்கள், முக்கிய நடிகர்களைத் தவிர பலரின் செயற்கையான நடிப்பு.

பஷீர் தோற்றத்தில் நடை, உடை, பாவனைகளில் முத்துராமலிங்கத் தேவரை பிரதிபலிக்கிறார். ஆனால், தேவரின் ஆளுமையை அவரால் நடிப்பில் கொண்டுவர முடியவில்லை.

முதல் படத்திலேயே பஷீருக்கு வரலாற்று நாயகர் என்ற பட்டத்தை டைட்டிலில் கொடுத்து இருக்கிறார்கள்.

‘காமராஜர்’ படத்தில் காமராஜர் போல தோன்றம் கொண்ட ஒருவர் காமராஜராக நடித்தார்.

ஆனால் அவரால் காமராஜரின் பர்சனாலிட்டியை கொண்டு வர முடியவில்லை. சாயாஜி ஷிண்டே பாரதியாராக தோற்றம் காட்டியதோடு பாரதியை உணரவும் வைத்தார்.

அப்படி முத்துராமலிங்கத் தேவராக நடிப்பவரும் தேவரை உணர வைக்க வேண்டாமா?

தேசியத் தலைவர் என்பதுதான் சரியான தமிழ். ஆனால், தேசிய தலைவர் என்று ஒற்று எழுத்து இல்லாமல் தவறாகப் பெயர் வைத்து இருக்கிறார்கள்.

முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்படும் ஒரு காட்சியில் கும்பலில் முதல் வரிசையில் நிற்கும் ஒரு பெண் சிரிக்கிறார்.

முதல்மாநிலமாநாடு என்று வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி விடாமல் ஒரு பேனர் வருகிறது.

கருப்பான ஓர் ஆளுக்கு முகத்தில் பாண்ட்ஸ் பவுடர் கொட்டிப் பூசி வெள்ளைக்கார அதிகாரியாக நடிக்க வைத்து இருக்கிறார்கள்.

தவம் செய்யும் காட்சியில் தேவராக நடிக்கும் பஷீர் சின் முத்திரையை தவறாக வைத்திருக்கிறார்.

சில இடங்களில் பஷீர் பேசும் இடங்களில் ஒழுங்காக டப்பிங் செய்யாமல் அவர் வெறும் வாயை அசைத்துக் கொண்டிருக்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். அந்தப் பேருக்கும் வரலாற்றுக்கும் உள்ள உரிய கம்பீரம் படத்தில் கொஞ்சம் கூட இல்லை.

– சு. செந்தில் குமரன்