த்ரிகுன், ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவிமரியா, தம்பி ராமையா, சத்யன் நடிப்பில் ராஜ சேகர் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கும் படம். அருண் விஷுவல்ஸ் சார்பாக கோவை ரமேஷ் தயாரித்து இருக்கிறார்.
ஒரு கல்லூரியில் ஹாஸ்டல் வார்டன் (ரவி மரியா) மற்றும் நண்பர்களிடம் சிவா (த்ரிகுன்) சொந்தக் கதையைச் சொல்வதாக ஆரம்பிக்கிறது படம்.
சிவாவுக்கும் அனிதாவுக்கும் (ஸ்ரீஜீத்தா கோஷ்) காதல்.
அனிதாவின் தோழிகள் எல்லாம் காதல் காலத்திலேயே டேட்டிங், செக்ஸ் என்று இருக்க, ”நீ மட்டும் இப்படி இருக்கியே” என்று கிண்டல் செய்ய, அனிதாவும் சிவாவை டேட்டிங்குக்கு அழைக்கிறாள்.
ஏதும் ‘பிரச்னை’ ஆகிவிடும் என்று சிவா பயப்பட, வற்புறுத்தி அழைத்துப் போகிறாள் அனிதா.
போன இடத்தில் ‘எல்லாம்’ நடக்கிறது. மீண்டும் அவள் அழைக்க, ஓர் ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பிக்கிறான் சிவா.
அனிதா காரணம் கேட்க, “உனக்கு முன்னே நான் என் டியூஷன் மிஸ் உடன் தப்பு பண்ணி இருக்கேன்” என்கிறான் சிவா.
கோபித்துக் கொண்டு வந்து விடுகிறாள் அனிதா.
ஒரு நிலையில் சிவாவின் சமாதானத்தை ஏற்கிறாள்.
மறுபடியும் டேட்டிங். மறுபடியும் எல்லாம்.
இப்போதும் ஓரமாக உட்கார்ந்து அழுகிறான் சிவா.
அனிதா காரணம் கேட்க, ஒரு ஆண்ட்டியுடனும் தப்பு செய்திருக்கிறேன் என்று அழுகிறான் சிவா.
மறுபடியும் பிரேக்கப் செய்கிறாள் அனிதா.
அனிதாவின் தோழி ஒருத்தி அனிதாவிடம்,
“பசங்க யாரும் பொண்ணுங்க கிட்ட உண்மையா இருக்கறதே இல்ல, ஆனா சிவா பாரு. எத்தனை பேர் கூட தப்பு பண்ணி இருந்தாலும் உன்கிட்ட உண்மைய சொல்றான்.
இவன்தனமா உலகத்துல உயர்ந்ந்ந்ந்ந்த காதலன் (நடிகர் சிவகுமாரின் தொண்டை நடுங்கும் குரலில் படிக்கவும்)” என்று சொல்ல,
அவனை திருமணம் செய்து கொண்டு, மேலும் அவன் மற்றவர்களோடு தப்பு செய்வதைத் தடுக்க முடிவு செய்கிறாள் அனிதா கோத்தகிரி கோடீஸ்வரியான அவள் அவனை தனது குடும்பத்தாருக்கு அறிமுகப்படுத்த அழைத்துச் செல்கிறாள்.
அங்கே போனால் அவன் தப்பு பண்ணிய ஆன்ட்டி அனிதாவின் அம்மா. . அவனது டியூஷன் மிஸ் அனிதாவின் அக்கா.
நடந்தது என்ன? என்பதே படம்.
”ஹி ஹி ஹி … படத்தோட ஜானரே அதுதான்..” என்று வழிகிறது படக் குழு.
விஜயஸ்ரீயின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழகு.
வண்ணம், உடைகள், கால் இயக்கம் அடச்சே. கலை இயக்கம்… இவை கவர்கிறது. ஷாட்களில் கவனம் கவர்கிறார் (அப்படி இல்ல,,,, அப்படி இல்ல…) இயக்குநர்.
இந்தப் படத்தில் நடிப்பு என்பதே உடம்பு காட்டுவதும் கெட்ட வார்த்தை பேசுவதும்தான்.
காலத்தின் கோலத்தில் அடல்ட் காமெடி என்ற ஜானர் இயல்பாகி விட்டதுதான். இருக்கட்டும்.
ஆனால், அது ரசனையாகவும் கிளுகிளுப்பாகவும் கிறக்கமூட்டுவதாகவும் இருக்க வேண்டும். அருவருப்பாக குமட்டுவதாக இருக்கக் கூடாது. இரட்டை அர்த்த காமெடி என்பது கேவலமாக இருக்கக் கூடாது .
“பாலாற்றில் சேலாடுது இடையில் நூலாடுது இரண்டு மேலாடுது..”
”கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ..?
”அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன்…
கண்ணருகில் பெண்மை குடியேற, கையருகில் இளமை தடுமாற, தென்னை இளநீரில் பதமாக, ஒன்று நான் தரவா இதமாக ..” போன்ற பாடல்கள் ஆகட்டும் .
“என்ன சார் ஆப்பம் வேணாமா?’ என்று ஆப்பம் விற்கும் பெண் கேட்க, ” இன்னிக்கு உன் ஆப்பம் வேணாம். வேற ஆள் கிட்ட வாங்கிக்கிறேன்”
“ஹலோ மேடம், சார் இருக்காருங்களா?”
“அவரு மேல இருக்காருங்க..”
“ஓ. சாரிங்க . நான் அப்புறமா கூப்பிடறேன்”
– என்ற வசனங்கள் ஆகட்டும்
இதிலும் ஆபாசம் இருக்கிறது. ஆனால் நயமாக இருக்கிறது. அதனால்தான் கசடு குறைகிறது.
உடலுறவு என்பதற்கான கெட்ட வார்த்தையை நேரடியாகக் குறிக்கும் இரண்டு வார்த்தைகளை படத்தின் எல்லா பாத்திரங்களும் வாயை நாக்கை வளைச்சு வளைச்சு பேசப் பேச, கேட்கும்போது எரிச்சல்தான் வருகிறது.
படத்தில் வரும் எல்லாப் பெண்களும் ”முகம் மட்டும்தான் எங்களுது. கழுத்துக் கீழ எதுவுமே எங்களுது இல்ல. நீங்க என்ன வேண்ணா பண்ணிக்குங்க” என்ற லெவலில் நடிக்கிறார்கள் .
படத்தில் கோத்தகிரி என்ற பெயர் அடிக்கடி சொல்லப்படுவது கூட ஆபாச நோக்கத்தில்தான். கதாநாயகியின் பெயரான (ஜீத்தா கோஷ் என்பதை இவர்கள் எப்படி பார்த்து இருப்பார்களோ என்ற பயமம் வருகிறது).
இதுபோன்ற படங்களில் எல்லாம் ரேபிடோ பெயரை யாரும் சொல்ல மாட்டேன் என்கிறார்கள். எல்லாமே ஓலாவும் ஊபரும்தான்.
கிளுப்பான காமெடி படங்கள், தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கட்டும்.
ஆனால் பியூரிஃபை செய்து ரசிக்கும்படி கொடுக்க வேண்டும்.
ஆனால் அதற்கு ரசனை வேண்டும்.
ஒருக்களித்துப் படுத்தபடி, வளைந்து, நீட்டிய காலும் நீட்டிய கையில் அருகருகே இருக்கும் சுருண்ட நிலையில், ஒரு பெண்ணை ஆண் பார்த்து விடக் கூடாது. அப்போது அவள் பூரான் போன்ற தோற்றத்தில் இருப்பாள். அதைப் பார்த்துவிட்டால் அவள் மேல் இருக்கும் மோகம் போய்விடும் என்கிறது காம சாஸ்திரம். (புல் தின்னும் புலிகளும் இருக்கலாம். அது வேறு விஷயம்)
இன்னொரு தாயாக நினைக்க வேண்டிய மாமியார் என்ற உறவை இப்படி அசிங்கப்படுத்தி படம் எடுப்பது சரியல்ல.
இதுபோன்ற படங்களைப் பார்ப்பது நமக்கு பிடித்த பெண்ணை ஆடை இல்லாத நிலையில் பூரான் வடிவத்தில் பார்ப்பதற்க்கு சமம். ரொமான்ஸ், காமம் பெண்ணுடல் இவற்றின் மேல் ஈர்ப்பு இல்லாமலே போய்விடும்,
மொத்தத்தில் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி.. … YUCKY … NASTY…INSIPIDITY .
– சு.செந்தில் குமரன்