சில காலம் முன்பு வரை, ஒரு திரைப்பட பாடல் ஹிட்டா இல்லையா என்பதைப் படம் வெளியான பிறகும் சரியாகக் கணிக்க முடியாது.
இசை சேனல்களிலும் எஃப்.எம். ரேடியோக்களிலும் அடிக்கடி அந்தப் பாடல் ஒலிபரப்பப் பட்டாலேயே அது மக்களை கவர்ந்த பாடல் என்று தெரிந்துகொள்ள முடியும்.
சமூக வலைதளம் ஆக்கிரமித்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் நிலைமையே வேறு. படம் வெளியாவதற்கு முன்பே, பாடல் வரிகள் அடங்கிய ‘லிரிக்கல் வீடியோ’ வெளியாகிவிடுகிறது.
யூடியூப்பின் புரட்சியால் சில நிமிடங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்கள் பாடலைப் பார்த்துவிட்டு, லைக்குகளை அள்ளித் தருகின்றனர்.
சில மணி நேரங்களில், டிரெண்டிங்கில் இடம் பிடிக்கும் பாடல், ரசிகர்களின் க்ரியேட்டிவிட்டியால் பல வெர்ஷன்களில் உலா வரும்.
கிட்டத்தட்ட ஒரு பாடல் வெளியாகும் அதே நாளில், அப்பாடல் ரசிகர்களின் மனதைத் தொட்டதா, இல்லையா என்பது தெரிந்துவிடும்.
அதன்படி பாடல்கள் மூலம் இசையமைப்பாளர்களும் பாடகர்களும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர்.
அந்த வகையில், பல சூப்பர் ஹிட் தமிழ்ப் பாடல்களை மதுஸ்ரீ பாடி இருக்கிறார்.
பெரும்பாலும் ரஹ்மானின் இசையில் அவர் பாடி இருந்தாலும், வித்யாசாகர், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், இமான், சத்யா ஆகியோரின் இசையிலும் பாடி இருக்கிறார்.
பெண்கள் மனதைப் பிரதிபலிக்கும் பல காதல் பாடல்கள்தான் மதுஸ்ரீயின் ஹிட்ஸ்.
ஆயுத எழுத்து படத்தில் வரும் ‘சண்டக்கோழி கோழி’, அன்பே ஆருயிரே படத்தில் ‘மயிலிறகே’, தீபாவளி படத்தில் ‘கண்ணன் வரும் வேளை’, சக்கரகட்டி படத்தில் ‘மருதாணி’, எங்கேயும் எப்போதும் படத்தில், ‘உன் பெயரே தெரியாது’,
மங்காத்தாவில் ‘நண்பனே’, இவன் வேற மாதிரி படத்தில் ‘என்னை மறந்தேன்’, நெடுஞ்சாலை படத்தில் ‘இவர் யாரோ’ போன்ற பாடல்கள் மற்றும் இன்னும் சில பாடல்களைப் பாடி இருக்கிறார்.
தமிழ் மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பாடி இருக்கிறார் மதுஸ்ரீ.
ஆல் டைம் ஃபிலிம் வெர்சடைல் பின்னணி பாடகிக்கான லயன்ஸ் கோல்ட் விருதின் 20-வது எடிஷனை அவர் வென்றுள்ளார்.
நடிகர் சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படத்தில் “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது” பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திகா ராஜேந்திரன்
- நன்றி – இந்து தமிழ் திசை