ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில் அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன் தயாரித்து இயக்கிய திரைப்படம் “மிரியம்மா” நடிகை ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அவரோடு வி.ஜே. ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்களுக்கு ஏ.ஆர். ரெஹானா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நடிகை ரேகா பேசும்போது, “நான் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நினைக்கும் போது சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பை எனக்குக் கொடுத்த அந்தக் கடவுளுக்கும், பத்திரிக்கை நண்பர்களாகிய உங்களுக்கும் என் நன்றிகள். அதுபோல் என் உயிரினும் மேலான என் ரசிகர்களுக்கும் நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
ஒரு படத்தில் நாம் நடித்த கதாபாத்திரத்தின் பெயரைச் சொல்லி நம்மை யாராவது அழைக்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கும். தமிழில் ஜெனிபர் டீச்சர், ரஞ்சனி, உமா போன்ற கதாபாத்திரங்கள் எனக்கு அப்படி அமைந்தது.
அதுபோல் மலையாளத்தில் ராணி, மீனுக்குட்டி போன்ற கதாபாத்திரங்கள் பேர் சொல்வது போல் அமைந்தது. அந்த வரிசையில் கண்டிப்பாக இந்த மிரியம்மாவும் இடம் பெறும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் கதை சொல்லும் போதே என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கத் துவங்கிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் ஏதோவொன்று இருக்கிறது, விட்டுவிடாதே என்று என் மனம் குதூகலித்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் நன்றிகள்.
நான் நடித்த சில கதாபாத்திரங்கள் சற்று திமிர்பிடித்த கதாபாத்திரங்கள் என்பதால் என்னைப் பார்ப்பதற்கு அப்படித் தெரியும். ஆனால் நான் உண்மையில் அப்படி இல்லை.
என்னைப் போன்ற நடிகைகளுக்கு இப்பொழுது பணம் ஒரு பொருட்டல்ல, நாங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து எங்களை நிரூபிக்க விரும்புகிறோம். நாற்பது வயது ஆகிவிட்டாலே கறிவேப்பிலையை தூக்கி எறிவது போல் எங்களை எறிந்து விடுகிறார்கள்.
கமர்ஸியல் திரைப்படங்களால் கதாநாயகிக்கான முக்கியத்துவம் போய் விட்டது. எல்லோரும் என்னை ஃபாரினில் சென்று செட்டில் ஆகிவிட்டீர்களா..? என்று கேட்கிறார்கள்.
நான் எப்பொழுதுமே சென்னையில் இருக்கவே விரும்புகிறேன். நிறைய திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். உயிருள்ள வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது என் ஆசை” என்றார்.