மங்காத்தா ஃபிலிம்ஸ் சார்பில் ரவி தயாரிக்க, நட்டி நடராஜ், சிங்கம் புலி, ஜாவா சுந்தரேசன் என்கிற சாம்ஸ், முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, முத்துராமன், முருகானந்தம் நடிப்பில், நாதன் பெரியசாமி இயக்கி இருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’.
இந்தியாவில் இருந்து கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் மகாராணிக்கு போன வரலாறு பலருக்கும் தெரியும்.
இந்தப் படத்தின் கதைப்படி, அப்படிப் போனது ஒரு வைரம் அல்ல, இரண்டு வைரம். ஒரு வைரத்தை மகாராணிக்கு கொடுத்த பிரிட்டிஷ் அதிகாரி, அடுத்த வைரத்தைத் தானே அமுக்கிக் கொள்கிறார்.
அது ரகசியமாகவே இருந்து, பின்னாளில் இந்திய அரசியல்வாதியின் பினாமியாக லண்டனில் உள்ள ஒரு நபர் கைக்கு வருகிறது. அதை இந்தியாவுக்குக் கடத்தி வரும் வழியில் அதைக் கைப்பற்ற ஒரு போலீஸ் அதிகாரி திட்டமிடுகிறார்.
அவரிடம் இருந்து அதைத் திருட போலீஸ் அதிகாரி நினைக்கிறார்.
அதற்கு ஒரு எமகாதகன் வேண்டும் (?) என்பதால்,
எம் எல் எம், பக்தி, பேச்சுத் திறமை இவற்றின் மூலம் பலரை ஏமாற்றி காசு சம்பாதிக்கும் ஒரு எமகாதகனை (நட்டி நடராஜ்) நியமிக்கிறார்கள்.
கஸ்டம்ஸ் அதிகாரி வீட்டிலிருந்து அதையும் பணத்தையும் எடுக்கும் அவன், வைரத்தை ஓரிடத்தில் புதைத்து விட்டு போலீசிடம் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வைரம் இல்லை என்கிறான். எனினும் அவனை நம்பாத போலீஸ் அடி, உதை என்று பின்னி எடுக்கிறது.
அதையெல்லாம் தாங்கி, சில மாதங்கள் கழித்து விடுதலை ஆகி, வைரத்தைப் புதைத்த இடத்தில் போய்ப் பார்த்தால் ஒரு பெரிய சாமியார் ஆசிரமம் இருக்கிறது. அது எம்.எல்.ஏ (முத்துராமன்) கண்ட்ரோலில் இருக்கிறது.
எம்.எல்.ஏ மகளை (ஷாலினி) காதலிக்கும் ஒருவன் (முகேஷ் ரவி) அதற்காகவே எம்.எல்.ஏ-விடம் உதவியாளனாக இருக்கிறான். ஆனால், எம்.எல்.ஏவிடம் இருந்து எமகாதகன் பணத்தைத் திருட, உதவியாளனை விரட்டி அடிக்கிறார் எம்.எல்.ஏ.
அந்த இளைஞனையும் தன்னிடம் ஏமாந்த மாதிரியே மக்களை ஏமாற்ற முயன்ற ஒரு நபரையும் (சிங்கம் புலி), துணையாக வைத்துக்கொள்ளும் எமகாதகன்,
தான் இமயமலையில் இருந்து வந்த சாமியார் என்று எல்லோரையும் நம்பவைத்து, ஆசிரமத்தைக் கையில் எடுக்கிறான்.
எம்.எல்.ஏ வும் அவனை நம்பி, பெரும் பணத்தை சாமியார் வசம் கொடுக்கிறார்.
வாய்ப்புத் தேடி வந்த ஒரு சீரியல் நடிகையை வளைக்கிறார் சாமியார்.
பல மாதங்களுக்கு முன்பு தான் வைரத்தைப் புதைத்த இடத்தில் சாமியார், ரகசியமாகத் தோண்டிப் பார்க்க அங்கே வைரம் இல்லை.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படம்.
கதையில் கூறப்பட்டிருக்கும் படத்தின் அடிப்படை விஷயங்கள் ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படத்துக்கு ஏற்றவைதான்.
சதுரங்க வேட்டையை ஞாபகப்படுத்தும் இந்தப் படம் (காரணம் ஹீரோயிக் வில்லன் அதே நட்டி நடராஜ் என்பதால். அதனால்தான் அவரை ஹீரோவாகவே போட்டு இருக்கிறார்கள்) எனவே சதுரங்க வேட்டையோடு ஒப்பீடு தானாகவே வருகிறது (ஒருவேளை நாயகன் நட்டி இல்லை என்றால் கூட இந்த ஒப்பீடு வந்திருக்காது)
இந்தக் காரணத்தாலேயே அடிப்படையில் திரைக்கதையில் சதுரங்க வேட்டையை மிஞ்சி இதன் திரைக்கதை இருக்க வேண்டும். அது முடியாவிட்டாலும் ஓரளவாவது சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்.
ஆனால், சதுரங்க வேட்டை படத்தின் மலிவுப் பதிப்பு இணைப்பு போல இருக்கிறது படம். ‘சதுரங்க வேட்டை’யில் மிக சாதாரணமாக நடித்திருந்த நட்டி நட்ராஜ், இந்தக் ‘கம்பி கட்ன கதை’ படத்தில் அட்டகாசமாக நடித்து இருக்கிறார்.
படத்தின் தயாரிப்பாளர் ரமேஷ், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியபோது, “22 ஆண்டுகளாக நான் உருவாக்கிய கதை இது” என்றார். சதுரங்க வேட்டை படம் வெளி வந்தே பதினோரு ஆண்டுகள் ஆகிறது.
அதற்கு பதினோரு வருடம் முன்பிருந்தே தயாரிப்பாளர் ஆசைப்பட்ட படம் என்பதில் ஒன்றும் தப்பு இல்லை.
ஆனால் பதினோரு வருடம் முன்பு சதுரங்க வேட்டை என்ற படம்தான் வினோத் என்ற அஜீத், விஜய் இயக்குநரையும் நட்டி நடராஜை ஹீரோவாகவும உருவாக்கிய படம் என்னும்போது,
அடுத்த பதினோரு ஆண்டுகள் கழித்து அதே நட்டியை ஹீரோவாகப் போட்டு எடுக்கும்போது திரைக்கதையில் சும்மா தெறிக்க விடும்படி தயாரிப்பளார் திரைக்கதை வசனம் தயார் செய்திருக்க வேண்டும். அது இல்லை.
முருகானந்தம் திரைக்கதையில் நேர்த்தி என்று எதுவும் இல்லை. அவரின் வசனங்கள் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்கவும் சில இடங்களில் லேசாகப் புன்னகைக்கவும் வைக்கிறது. பல நேரம் வசனங்கள் வெகு சாதாரணமாகப் போகின்றன.
அதோடு, அவர் காமெடி என்று ஒரு கேரக்டரில் நடித்து இருக்கிறார். காமெடியே இல்லை.
படத்தில் நீளம் இரண்டு மணி நாற்பது நிமிடம்.
அந்தக் காட்சிகளை மொத்தமாக தூக்கினால் படத்தின் அதிக நீளம் குறையும்.
இது போன்ற குறைகளால் எம்.ஆர்.எம். ஜெய் சுரேஷின் ஒளிப்பதிவு, சதீஷின் இசை இவை பலன் தரவில்லை.
எடிட்டர் பாசில் இன்னும் கொஞ்சம் விடாப்பிடியாக இருந்திருக்கலாம். கலை இயக்குநர் சிவகுமார் பாராட்டுப் பெறுகிறார். (அதற்கு தயாரிப்பாளரும் காரணமாக இருந்திருக்கலாம்).
படத்தின் இரண்டாவது கதாநாயகனான முகேஷ் ரவி ஆரம்பத்தில் அழகிகளோடு சிக்ஸ் பேக்கில் குளித்துக் கொண்டு, எக்சர்சைஸ் செய்து கொண்டு ஒரு பாட்டுப் பாடுகிறார். அனேகமாக அவர் தயாரிப்பளருக்கு நெருங்கியவராக இருப்பார் என்று தோன்றுகிறது.
இந்தக் கேரக்டருக்கு எதுக்கு அந்தப் பாட்டு? அப்புறம் கனவு என்று சொல்வது எல்லாம் எந்தக் கால உத்தி?
அந்தக் கேரக்டருக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? ஏனெனில் கிளைமாக்ஸ் ஃபைட்டிலும் நட்டிதான் ஸ்கோர் செய்கிறார்.
படம் போகப் போக எப்படா முடியும் என்று தோன்றுகிறது. அவ்வளவு நீளம். அவ்வளவு பேச்சு. சிறு சிறு திருப்பங்களும் முடியும்போது சாதாரணமாக முடிகின்றன.
ஒரு படம் என்றால் அதில் குற்றவாளி வில்லனோ அல்லது ஹீரோவோ ஒரு நிலையில் திருந்தினான் அல்லது தண்டிக்கப்பட்டான் அல்லது செத்துப் போனான் என்று சொல்வது ஒரு படைப்பின் கடமை அல்லவா?
இப்போதெல்லாம் சினிமாவில்தான் நியாயம் ஜெயிக்கிறது. அதையும் கொன்று விட்டால் எப்படி?
இந்தப் படம் பார்த்து வெளியே வரும் யாருக்கும், “தக்காளி… யாரையாவது ஏமாத்தியாவது சம்பாதிக்கணும்டா” என்ற கொலைவெறி வரவும் வாய்ப்பிருக்கிறது.
அதுக்கு எதுக்கு தம் பிடித்து கம்பி கட்டணும்?
பரவால்ல.. இந்த மாதிரி படம்தான் பிடிக்கும் என்பவர்கள் இந்தப் படத்துக்கு போய் வரலாம்.
மொத்தத்தில் ‘கம்பி கட்ன கதை’… சதுரங்க வேட்டையில் கட்டிய கம்பிகளை எல்லாம் அறுத்து விட்டிருக்கிறார்கள்.
– சு. செந்தில் குமரன்