‘அருணகிரிநாதர்’ படப் பாடல் பதிவு நேரம் அது. (1964)
உடல் குலுங்கக் குலுங்க சிரித்தார் டிஎம்எஸ்.
“என்னய்யா சொல்கிறீர்கள்? வேடிக்கையாக இருக்கிறதே!
நான் பாடப் போகும் இந்தப் பாடல் வரிகளுக்கு என்ன அர்த்தம் என்பது இங்கே இருக்கும் எவருக்குமே தெரியாதா?”
கையில் பாடல் வரிகள் அடங்கிய காகிதத்தை வைத்துக்கொண்டு மைக் முன் நின்றபடி டிஎம்எஸ் இப்படிக் கேட்க, ஒலிப்பதிவுக் கூடத்தில் இருந்த அத்தனை பேரும் அவரது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.
சிரிப்பதை நிறுத்திய டிஎம்எஸ்ஸின் குரல் கொஞ்சம் கோபத்தோடு உயர்ந்தது.
“அர்த்தம் சொல்லுங்கள் ஐயா, அது தெரியாவிட்டால் நான் எப்படி உணர்வுகளோடு இதைப் பாட முடியும்? அந்தப் பாடலைக் கேட்பவர்கள்தான் எப்படி அதை முழுமையாக ரசிக்க முடியும்?”
சுற்றி இருந்தவர்களின் மௌனம் தொடர்ந்தது.
மீண்டும் ஒரு முறை தன் கையிலிருந்த அந்தப் பாடல் வரிகளை வாசித்துப் பார்த்தார் டிஎம்எஸ்.
“முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும்…”
திரும்பத் திரும்ப வாசித்துப் பார்க்கிறார் டி.எம்.எஸ். அதன் பொருள் விளங்கவில்லை.
தலைநிமிர்ந்து தன்னைச் சுற்றி இருந்தவர்களைப் பார்த்த பின், அழுத்தமாக உதட்டைப் பிதுக்கிவிட்டு, பாடல் எழுதி இருந்த காகிதத்தை கீழே வைத்தார் டி.எம்.எஸ்.
“அர்த்தம் தெரியாவிட்டால் ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தாலும் பாட மாட்டான் இந்த சௌந்தரராஜன்…” இப்படிச் சொல்லிவிட்டு ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து புறப்பட்டும் விட்டார் டிஎம்எஸ்.
அவரது பிடிவாதம் அறிந்த படக்குழுவினர் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்.
அப்போது அருகில் இருந்த யாரோ ஒருவர் அசரீரி போல குரல் கொடுத்தார்: “வாரியார் சுவாமிகளைக் கேட்டால் இதன் பொருள் புரியும்…”
“அப்படியா?” என்று திரும்பி அவரைப் பார்த்துக் கேட்ட டி.எம்.எஸ்., அடுத்த நிமிடமே வாரியார் வீட்டை நோக்கி விரைந்து புறப்பட்டார் .
வரவேற்றார் வாரியார்.
பணிவோடு தன் அருகில் வந்து அமர்ந்த டிஎம்எஸ்க்கு புன்னகையோடும் பொறுமையோடும் பொருள் விளக்கினார் வாரியார் :
“முத்தைத்தரு பத்தித் திருநகை…
வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த…
அத்திக்கு இறை…
தெய்வயானை அம்மைக்குத் தலைவரே…
சத்திச் சரவண…
சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே…
முத்திக்கொரு வித்துக் குருபர…
மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே…”
இப்படியாக ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருளை வாரியார் விளக்கமாக எடுத்துச் சொல்ல சொல்ல, அதை கவனமாக கேட்டுக் கொண்டு, அதன் பிறகே ‘அருணகிரிநாதர்’ படத்தின் அந்தப் பாடலைப் பாடினாராம் டி.எம்.எஸ்.
ஆனால், அதே பாடலை வாரியாரின் உயிரற்ற உடல் அருகே அமர்ந்து பாட வேண்டிய சூழ்நிலை வரும் என அப்போது நினைத்துப் பார்க்கவில்லை டிஎம்எஸ்.
வாரியாரின் இறுதிச் சடங்கு வேலூரை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான காங்கேயநல்லூரில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வாரியாரின் உடல் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி முருகன் பாடல்களை மனமுருக பாடிக் கொண்டிருந்தார் டிஎம்எஸ்.
லண்டன் சென்றிருந்த வாரியார் சென்னைக்கு விமானத்தில் திரும்பி வந்துகொண்டு இருந்தபோது 7.11.1993 அன்று அதிகாலை வானில் விமானம் பறந்துகொண்டு இருந்தபோதே இறந்து போனார்.
ஆனால், தன் இறுதிக் காலம் நெருங்குவதற்கு பல காலம் முன்பே இப்படிச் சொல்லி இருந்தார் வாரியார் :
“என் வாழ்வின் முடிவு எப்படி இருக்கும் என்பதை என் அப்பன் முருகப் பெருமான் என்றோ எனக்குச் சொல்லி விட்டான்.
தன் வாகனமான மயிலை அனுப்பி, எந்த ஒரு கஷ்டமும் எனக்கு இல்லாமல் அந்த வானத்துக்கு என்னை எடுத்துக் கொள்வான் என் அப்பன் முருகன்…”
வாரியார் வாக்கு பலித்தது!
வானத்தில் பறக்கும்போதே அவர் உயிர் பிரிந்தது!
இறைவனோடு இரண்டறக் கலந்தது!
– ஜான் துரை ஆசிர் செல்லையா