சில தினங்களுக்கு முன், தான் நடிக்கும் தெலுங்கு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
அப்போது படப்பிடிப்பு தளத்தில், சமையல்காரர்கள், சுடச்சுட தோசை சுட்டு படக்குழுவினருக்கு வழங்கி கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த ஐஸ்வர்யாவுக்கு திடீர் ஐடியா தோன்றியது.
அந்த இடத்துக்குச் சென்ற அவர், தனது கையால் தோசை சுட்டு படக்குழுவினர் அனைவருக்கும், தன் கையாலேயே பரிமாறினார்.
ஐஸ்வர்யா சமையல் கலையிலும் தேர்ச்சிப் பெற்றவர் என்பது அப்போதுதான் படக்குழுவினருக்கு தெரிய வந்தது.
தோசை சாப்பிடுவோர் முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்த ஐஸ்வர்யா, உற்சாகமானார்.
மள மளவென தோசைகளைச் சுட்டு அசத்தியவர், “தோசை வேண்டுமா? தோசை வேண்டுமா?” எனக் கேட்டு, சாப்பிட்டு கொண்டிருந்தோர் இடத்துக்கே போய், பரிமாறி, யூனிட் ஆட்களை திக்குமுக்காடச் செய்தார்.
இதுகுறித்து பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், “செட்டில் உழைப்பவர்களுக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கும் விதமாக இதைச் செய்தேன்” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.
படக்குழுவினருக்கு அவ்வப்போது, தன் கையால் பிரியாணி செய்து போட்டு சந்தோஷப்படுபவர் அஜித். அவரது பாணியைப் பின்பற்றியுள்ளார், ஐஸ்வர்யா ராஜேஷ்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என நயன்தாராவை வர்ணிக்கும் நெட்டிசன்கள், இனி ‘லேடி அல்டிமேட் ஸ்டார்’ என ஐஸ்வர்யாவை வர்ணிக்கக்கூடும்.
– பாப்பாங்குளம் பாரதி.