ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர், இயக்குனர் ஏ. வெங்கடேஷ் நடிப்பில், சிவகுமார் முருகேசனோடு சேர்ந்து எழுதி கலையரசன் தங்கவேலு இயக்கி இருக்கும் படம் ‘ஆண்பாவம் பொல்லாதது’.
டிரம்ஸ்டிக் புரடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன் பட்டி சக்திவேல், விவேக், விஜய் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் சிவா (ரியோ), அம்மா, அப்பாவோடு சக்தியை (மாளவிகா மனோஜ்) பெண் பார்க்கப் போகிறான்.
அப்பாவின் (வெங்கடேஷ்) ஆணாதிக்கக் கட்டுப்பாட்டில் வளர்ந்த சக்திக்கு, தான் பெண்களை சம உரிமை கொடுத்து நடத்துபவன் என்பதை சிவா உணர்த்த, திருமணம் நிச்சயமாகிறது.
கல்யாணத்துக்குள் காதலித்தும் பார்க்கிறார்கள். ஆனால், கல்யாணம் முடிந்த சில நாட்களுக்குள் எல்லாம் மாறுகிறது.
தினமும் சேர்ந்து சமையல் செய்யும் கட்டாயம் வருகிறது. அவள் வீட்டில் இருக்க, வேலை முடிந்து வரும் அவனுக்கு வீட்டு வேலை சுமையாக இருக்கிறது.
அவளது செயல்பாடுகள், ”நீதானே சம உரிமை தர்றேன்னு சொன்ன…” என்ற ரீதியில் அவள் பறக்கிறாள்.

தாலியைக் கழட்டி பீரோவில் வைத்து விட்டு தினசரி ரீல்ஸ் போடுவது, கவர்ச்சியான உடைகளில் ரீல்சில் ஆடுவது, அதற்கு ஆபாசமாக மற்றவர்கள் போடும் கமெண்ட் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அப்படியே செயல்படுவது,
ரொம்ப காஸ்ட்லியான பொருட்களையே வாங்குவது, வீட்டில் வெளியே ஆர்டர் பண்ணியே சாப்பிடுவது, “பொண்டாட்டிக்கு செலவு பண்றது உன் கடமை” என்பது,
நண்பர்கள் அனைவரையும் தோழர் தோழர் என்று சொல்லிக்கொண்டு காரல் மார்க்ஸ் யார் என்றே தெரியாமல் இருப்பது உட்பட அவளது வீண் அலட்டல்கள் அல்லது புரியாமைகளால் முன்னரே கொந்தளித்தப் போயிருக்கிறான் சிவா.
ஒருநாள் திடீரென்று சக்தி தன் நண்பன் ஒருவனுடன் சேர்ந்து பியூட்டி பார்லர் ஆரம்பிக்க விரும்புவதாகச் சொல்ல, ”தெரியாத வேலையைச் செய்யாதே” என்று சிவா சொல்ல,
வாக்குவாதம் அதிகமாகி, அவள் டென்ஷனாகி மயங்கி விழ, அப்போதுதான் அவள் கருவுற்று இருப்பது சிவாவுக்கு தெரிய வர, அப்போதே அந்தக் கரு கலைந்துவிட, புருஷன் பொண்டாட்டி உறவில் விரிசல்.
டைவர்ஸ்க்கு அப்ளை!
எப்படியாவது டைவர்ஸ் வாங்கிக் கொடுத்துவிட வேண்டும் சக்தியின் வக்கீல் லக்ஷ்மி (ஷீலா) முயல, எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று சிவாவின் வக்கீல் (ஆர்.ஜே விக்னேஷ்) முயல, விவாகரத்து கிடைத்ததா? என்ன நடந்தது என்பதே படம்.

சிரத்தையாக எழுதப்பட்ட கதை திரைக்கதை வசனம்.
ஆரம்பத்தில் காரல் மார்க்ஸ் போன்ற விவகாரங்கள், ‘ஏதோ இருக்கு’ என்று நினைக்க வைத்தாலும், பல படங்களில் வந்த காட்சிகளே அடுத்தடுத்து வந்தது நிஜம்.
ஆனால், இடைவேளைக்கு முன்பு ‘சிரி (ஆனால்) சிந்தி’ பாணியில் வரும் அந்த தெறிக்க விடும் காட்சி, படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
இடைவேளைக்கு பிறகான படத்தின் இரண்டாவது பாதியில் விக்னேஷ் காந்த் கேரக்டருக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் படத்துக்கு பெரிய பலம்.
விக்னேஷ்காந்த் – ஷீலா கதை, விதி என்ற பழைய படத்தைப் போல் இருக்கிறதே என்று நமக்கு தோன்றும் நொடியில், விக்னேஷ் காந்திடம் ”நீங்க பிரியக் காரணம் என்ன?” என்பது போன்ற ஒரு கேள்விக்கு அவர் ”எல்லாம் ‘விதி’தான்” என்பது ரகளை.
ஒரு நிலையில் ‘பெண்ணைப் பெற்ற அப்பாக்களே! நீங்கள் உங்க பெண்களின் எந்த விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்க்காதீர்கள்.
அதனால் கல்யாணம் பண்ணிய பிறகு உங்கள் பெண்கள், கணவனின் உயிரை வாங்குகிறார்கள்’ என்ற ரீதியில் கணவன் சொல்ல,
‘அப்படிக் கட்டுப்பெட்டியா வளர்த்ததால்தான் நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனீங்க. உங்களுக்குதான் குடும்பம் நடத்த தெரியல’’ என்று பெற்றோர்கள் சொல்ல, படம் இப்படி ஏதோ செய்யப் போகிறது என்று பார்த்தால்,
முற்றிலும் வேறு பக்கம் திரும்பி, ஆனால் சிறப்பாக பயணிக்கிறது திரைக்கதை.
குடும்ப நலக் கோர்ட்டுகளில் நடக்கும் கொடுமைகள், பெண்களுக்கு இருக்கும் சலுகைகள், ஆண்கள் என்றாலே வில்லனைப் போல் பார்ப்பது,

விவாகரத்து கேட்கும் பெண்கள் தரப்பு எடுத்துக்கொள்ளும் சலுகைகள், காசுக்காக கலர் மாறும் பெண் போலீஸ்கள், கோர்ட்டு ஊழியர்கள்,
மனைவி விவாகரத்து கேட்டுக் கொடுத்தால் கணவன் சொத்தில் பாதியும் மாத வருமானத்தில் பங்கும் கொடுக்காமல் தப்பிப்பது எப்படி என்ற ஐடியாக்கள் என சும்மா பிரித்து மேய்ந்து இருக்கிறார்கள். சபாஷ். பாராட்டுகள் சிவகுமார் முருகேசன், கலையரசன் தங்கவேலு.
கிளைமாக்சில் வரும் வசனங்கள் நெகிழ்ச்சியோடும் கணத்தோடும் சிந்திக்க வைக்கின்றன.
அம்பேத்கருக்கும் போர்பந்தருகும் உள்ள சம்மந்தத்தை வைத்தே படத்தை முடிக்கும் அந்த ‘ஸ்கிரிப்ட்டோரியல்’ டச்சும் அருமை.
இதுவரை ரியோ நடித்த படங்களில் இதுதான் பெஸ்ட். நடிப்பு, வசனம் பேசும் முறை, மாடுலேஷன், சரியான இடைவெளிகள் விட்டுப் பேசுவது என்று பாராட்டுக்குரிய வகையில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் தேவதை போலவும், போகப்போக நச்சரிப்பவள், அப்புறம் கோபக்காரி, அப்புறம், அப்புறம் என்று அந்த மாற்றங்களை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார் மாளவிகா அவினாஷ்.
விக்னேஷ் – ஷீலா தேர்வு பொருத்தம்.
காமெடி வெடிகளால் அதிர விடுகிறது ஜென்சன் சம்மந்தப்பட்ட காட்சிகள். ஜென்சன் திவாகரின் எளிமையான நடிப்பும் சிறப்பு.
மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு வண்ணம், வெளிச்சம், காட்சிக்கான பின்புலம் என்று எல்லா வகையிலும் அருமையாக இருக்கிறது.
சித்துகுமாரின் இசை நன்று.
திரைக்கதை இன்னும் கொஞ்சம் சீக்கிரம் பரபரப்பாகி இருக்க வேண்டும். அது ஒரு பலவீனம்.
இப்படிப்பட்ட ஒரு கதையில் இருவரின் பெற்றோர் கேரக்டர்களைத் தவிர்த்து விட்டு, ஒரு நிலையில் அய்யய்யோ கடமைக்கு காட்சிகள் வைத்திருப்பது போங்கு.

இதை எல்லாம் சரிசெய்து இருந்தால் இந்தப் படம் இன்னும் பாய்ச்சல் காட்டி இருக்கும்.
பொதுவாக சினிமாக்களில் அம்மாவின் பாசம் போற்றப்படுவது போல அப்பாவின் பாசம் போற்றப்படுவது இல்லை.
அதே போல விவாகரத்து வழக்குகளில் பெண்கள் படும் கஷ்டங்கள் பேசப்படுவது போல பணம், மரியாதை, சொத்து, நிம்மதி எல்லாம் இழந்து ஆண்கள்படும் கஷ்டங்களை எந்தப் படமும் சரியாகப் பேசவில்லை என்ற வருத்தம் இருந்தால் இந்தப் படத்துக்கு போகலாம்.
இதை விடவும் பல முக்கிய விஷயங்கள் திரையில் காத்திருக்கின்றன.
ஆண்பாவம் பொல்லாதது – எழுத்தின் வெற்றி.
– சு.செந்தில் குமரன்