குணா, காதல் கொண்டேன் படங்களின் சாயலா ‘சாரா’?
சாக்ஷி அகர்வால், விஜய் விஷ்வா, ரோபோ சங்கர், யோகி பாபு, தங்கதுரை, அம்பிகா, மிரட்டல் செல்வா இவர்களுடன் செல்லக்குட்டி என்பவர் முக்கிய வேடத்தில் நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘சாரா’.
பிரபல கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் தலைமை எஞ்சினியர் சாராவுக்கும் (சாக்ஷி அகர்வால்) அங்கேயே பணியாற்றும் இன்னொரு இன்னொரு என்ஜினீயருக்கும் (விஜய் விஷவா) காதல்.
கட்டிடங்களுக்கு கலப்பட மணல் அனுப்பி ஏமாற்றும் வெட்டுக்கிளி (மிரட்டல் செல்வா) என்பவனுக்கும் சாராவுக்கும் பகை.
அங்கே வாட்ச்மேனாக இருக்கும் நபர் (ரோபோ சங்கர்) காசுக்காக எதையும் செய்பவன்.
அவனுக்கு நண்பனாக என்ன வேலை செய்கிறான் என்பதே தெரியாமல், அங்கே சுற்றிக் கொண்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் காமெடி என்று பேசிக்கொண்டு இருப்பவன் ஒருவன் (யோகிபாபு).
இவர்களில் எல்லோரின் கேலி கொண்டலுக்கும் ஆளாகி யாராலும் மதிக்கப்படாத கோமாளி போன்ற ஒரு நபர் (செல்லக் குட்டி).
”இருபத்து நான்கு மணி நேரத்தில் உன்னைக் கடத்தி என்ன பண்றேன் பாரு” என்று சவால் விடுக்கும் வெட்டுக்கிளிக்கு உதவியாக, வாட்ச்மேன், வாய்க்கு வந்ததை பேசும் நபர், இவர்கள் அனைவரும் சாரவைக் கடத்த முயல்கிறார்கள்.

இது கோமாளிக்குத் தெரிந்தால் பிரச்சனை என்று அவனுக்கு மட்டும் தெரியாமல் பிளான் செய்கிறார்கள்.
கடத்தியும் விடுகிறார்கள்.
கடத்தியது யார் என்பதே ‘சாரா’.
சாராவும் அவளது குடும்பமும் கிராமத்தில் உள்ள கருப்பசாமி கோவிலுக்குப் போக, அங்கே பூஜை செய்யும் போது, கோவில் பூசாரி ஒருவரின் முகம் வெட்டுக்கிளி முகமாக மாற அந்தக் காட்சி. நிரம்ப எதிர்பார்க்க வைத்தது.
என்னடா இது கருப்பசாமி கொலை செய்வது போலக் காட்டுகிறார்களே… எப்படி இது சரி வரும்? எப்படி இதை நியாயம் செய்யப் போகிறார்கள். ஆகா.. ஒரு அட்டகாசமான பக்தி பிளஸ் அமானுஷ்ய படம் பார்க்கப் போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால்.. ம்ஹும்!
(சாரிங்க.. தெரியாம எதிர்பார்த்துட்டோம். மன்னிச்சுக்குங்க)
எல்லாராலும் பரிகாசமாக பார்க்கப்படும் ஒருவன் ஒவ்வொரு காடசியின் ஊடாக மெல்ல மெல்ல நிமிர்ந்து உயரம் தொடுவது என்பது உண்மையிலேயே சிறப்பான உத்தி.
பள்ளித் தோழி பொதுத் தேர்வில் தோற்று விடுவோம் என்று பயப்பட, தேர்வில் தான் எழுதிய விடைத்தாள்களை அவளுக்கு கொடுத்து விட, மாணவி பாஸ் ஆகி, எழுதிக் கொடுத்த நல்லா படிக்கும் தோற்பது என்பதுகூட கனமான விஷயம்தான்.
ஆனால், அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்பது இயக்குநர் செல்லக்குட்டிக்கு தெரியவில்லை.
அவருக்கு தெரிந்த ஒரே விஷயம் நடிக்கும்போது எல்லா காட்சிகளிலும் அவரே பேச வேண்டும்… பேச வேண்டும்… பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.
மற்ற யாரும் வாயைத் திறந்து பேசக் கூடாது. மீறிப் பேசினால் அவர்கள் வசனம் முடிவதற்குள் இவர் அவர்களைக் கடித்து விடுவார் போல இருக்கிறது.
காதல் சொல்ல வந்த பெண்ணை, தோழி என்று சொல்லி அனுப்பி விட்டு, பின்னர் வந்து மல்லுக்கட்டுவது ஏன் என்று புரியவில்லை.
என்ன வேண்டும் என்று மல்லுக் கட்டும் கேரக்டருக்கே புரியவில்லை.
படத்தின் பல காட்சிகளில் அந்த கோமாளி கேரக்டர் தேவையே இல்லாமல் சட்டையைக் கிழித்துக் கொண்டு சுவற்றில் முட்டிக் கொண்டு ஆ ஊ என்று கத்திக் கொண்டு அலைவது எரிச்சல்.
பள்ளித் தோழன் மனநோயாளியா, இல்லை நார்மலா? என்பது டைரக்டருக்கே புரியவில்லை.
படம் முழுக்க ஆபாச வசனங்கள். கதை என்று எழுதிய இடத்தில் யோகிபாபுவின் கேரக்டர் பற்றி என்ன சொல்லப்பட்டுள்ளதோ அப்படிதான் இருக்கிறது யோகிபாபுவின் நடிப்பு.

இயக்குனர் செல்லக்குட்டி வாட்டர் மெலன் திவாகரைவிட நூறு மடங்கு பெரிய நடிப்பு அர்ர்ர்ர்ர்ர்ர்ரக்கனாக இருக்கிறார்.
அவர் கத்துகிற கத்தில் – ரம்பா, ஊர்வசி, மேனகை ஆட்டங்களால் நிஷ்டை கலையாத முனிவர்கள் கூட, “ஐயோ நிறுத்துய்யா…” என்று நிஷ்டை கலைந்து எழுந்து விடுவார்கள்போல.
சரிப்பா… இதோட படத்தை முடிப்பார்கள் என்று நினைத்தால், படம் முடிந்து வீடு வந்து சேரும்வரை படம் ஓடிக் கொண்டே இருக்கிறது.
அனேகமாக குணா, காதல் கொண்டேன் படத்தை நினைத்து இந்தப் படத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும்.
ஆனால், முடித்தபோது அப்படி வரவில்லை?!
— சு.செந்தில் குமரன்