அவன் கதாநாயகனில்லை. ஆனால் பல எளிய மனங்களின் நாயகனாக இன்றளவும் இருந்தபடிதான் இருக்கிறான்.
தூத்துக்குடி அருகில் ஒரு மீனவ சமுதாயத்தில் பிறந்தவன், எப்படி நடிகனானான் என்பதே எனக்கு அவ்வளவு ஆச்சரியம்.
அவனது காலத்தில் அவனை நேசிக்காத மனங்களே இல்லாமல்தான் இருந்தன. அவனது கரகரத்த குரல் இன்றளவும் எனக்கான காந்தமாகத்தான் இருக்கிறது.
அவனது பாடல்கள் எனக்கு ஏதோவொரு பேரமைதியை வழங்கி எப்போதும் சாந்தப்படுத்துவையாகவே இருக்கின்றன. அவனது சிறப்புகளை தெரியாதவர்களுக்கு வேண்டுமானால் சொல்லலாம். உங்களுக்கு எதற்கு..
சின்ன வயசில் ஏதோவொரு படத்தில் பார்த்த முதல் கணத்தில் அவன் மீது அபிமானம் கொண்டேன். அந்தப் படம் எது என எனக்கு நினைவிலில்லை. ஆனால் அந்த முகம் இன்று வரை என்னை புன்னகையுடன் வசீகரித்தபடி இருக்கிறது.
எளிய மக்களின் கலைஞன் அவன். எங்கள் ஊரில் அவனுக்கு அத்தனை ரசிகர் கூட்டம் உண்டு. அப்போதெல்லாம் – 80 களில் – எம்.ஜி.ஆரும் படங்களும், சிவாஜி படங்களும் மறுபடி மறுபடி எங்க ஊர் தியேட்டர்களில் திரையிடப்படும்.
பெரும்பாலும் அவை மட்டுமே திரையிடப்படும். புதுப்படங்களெல்லாம் தேனி, மதுரை, கம்பத்தில்தான் ரிலீஸ். இரு ஹீரோக்களின் படங்களைத் தவிர, மாடர்ன் தியேட்டர் படங்கள், விட்டாலாச்சார்யா படங்கள், டூபான் மெயில், டூபான் குவீன் போன்ற படங்கள்தான் ரிப்பீட் ஆகும்.
இடையில் ஶ்ரீதர் படங்களும், பட்டணத்தில் பூதம் போன்றவையும் ஃபில்லர்ஸ்..
ஏதாவது ஒரு படத்தில் இவன் இருப்பதாகத் தெரிந்தால் அதற்காகவே மூன்று ஷோவும் தினந்தோறும் பார்த்த கூட்டமும் எங்கள் ஊரில் உண்டு.
சுமை தூக்கும் தொழிலாளி அவர்.. அவனை அவருக்கு அத்தனை பிடிக்கும். ஏன் அத்தனை பிடிக்கும் என்று எவரும் அவரிடம் கேட்டதோ, எவரிடமும் அவர் சொன்னதோ இல்லை.
ஒரு மானசீகக் காதல் என்று வைத்துக் கொள்ளலாம். படத்துக்கு எந்த வகுப்பு டிக்கெட் எடுத்தாலும் முன்னால் தரையில் சென்று அமர்ந்து கொள்வார்.
அப்போதெல்லாம் எங்கள் தியேட்டர்களில், சேர் உள்ள ஃபர்ஸ்ட் கிளாஸ், முதுகு சாய்மானம் கொண்ட பெஞ்ச் வைத்த செகண்ட் கிளாஸ், சாய்மானம் இல்லாத வெறும் பெஞ்ச் கொண்ட எகனாமி கிளாஸ் மற்றும் வெறும் தரையில் உட்கார்ந்து படம் பார்க்கக் கூடிய தரை கிளாஸ் என்று இருந்தன.
வெறும் தரையில் உட்கார்ந்த கோலத்திலோ, படுத்த கோலத்திலோ படம் பார்ப்பதற்கென்று ஒரு ஆடியன்ஸ் கூட்டமும் உண்டு.
நம்ம சுமை தூக்கும் தொழிலாளியான அண்ணனும் அதில் அடக்கம். தலைவர் அவன் படம் ஓடும்போதெல்லாம் தினமும் செகண்ட் ஷோவுக்கு டிக்கெட் எடுத்து போய் விடுவார்.
தரையில் அமர்ந்து இரண்டு மூன்று கஞ்சா சிகரெட்டுகளை புகைத்தபடி படம் பார்ப்பார். அவனது கடைசி பாடல், அல்லது கடைசிநடனம் முடிந்ததும் எழுந்து வீட்டுக்குப் போய்விடுவார்.
அந்தப் படம் திரையிடப்பட்டிருக்கும் நாள் வரை தினந்தோறும் அது நடக்கும். படம் எத்தனை முறை திரையிடப்பட்டாலும் இதுவே நடக்கும். அவன் நடித்த எந்தப் படம் வந்தாலும் இதுநடக்கும்..
அவனது மரணச் செய்தியை அந்த அண்ணன் எப்போது கேட்டார் எப்படி தாங்கிக் கொண்டார், அவரது ரியாக்ஷன் என்ன என்பது இந்த நாள் வரைக்கும் நான் பதிலறியத் துடிக்கும் கேள்விகள்..
நான் சொல்லும் இந்த ஒருவர் மட்டுமல்ல அவனது ரசிகர். இவரை மாதிரி அத்தனை ஆயிரம் பேர் அவனை வெறி கொண்டு நேசித்தனர்.
இன்னொரு அண்ணன். அவருககும் அவன் என்றால் அத்தனை உயிர். இருந்திருந்து வாழ்நாளில் முதல் முறையாக சென்னை வந்தார். மேம்பாலம், எலக்ட்ரிக் டிரெயின், பறக்கும் ரயில் என்று அத்தனையையும் அவ்வளவு ஆர்வமாகப் பார்த்தார்.
வாழ்நாளுக்குள் இந்திந்த ஆசைகள் நிறைவேற வேண்டும் என்று இரண்டே இரண்டை மட்டும் அவர்கொண்டிருந்தார்.
அதில் ஒன்று சென்னையை சுற்றிப் பார்ப்பது. அது நிறைவேறிய போது அவரது கண்ணில் தெரிந்த பெருமிதம் என்னை நெகிழச் செய்தது.
இரண்டாவது ஆசையையும் அவர் கேட்டார்..
அவனுடைய கல்லறை இருககுதாமே.. அங்க போய் பாக்கணும் என்றார்..அவரது தம்பியான என் நண்பனுக்கு ஆச்சரியம். அவனிடம் வாய் திறந்து அவனது அண்ணன் கேட்டமுதல் ஆசை அது. இவனுக்கு தலை கால் புரியவில்லை. அங்கே இங்கே விசாரித்து அண்ணனை அந்த கல்லறைக்கு அழைத்துச் செல்ல பஸ் ஏறினான்.
அண்ணன் ரொம்ப கூச்சப்பட்டு இன்னைக்கு மட்டும் குடிச்சிக்கிறவா என்று கேட்டார். இவன் சரி என்றதும் பாருக்கு சென்று அண்ணன் ஒரு குவாட்டரை குடித்தார் – அவருக்கு அதுவே அதிகம். இன்னொரு குவாட்டரை வாங்கிக் கொண்டார். என் நண்பன் எதுவும் பேசவில்லை.
இருவருமாக அவனது கல்லறைக்கு சென்றிருக்கிறார்கள். அண்ணன் அங்கே சென்று அமைதியாக நின்றிருக்கிறார். மதுவினாலா இல்லை மனதுக்குள் இருந்ததா என்று தெரியவில்லை. அவர் குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்திருக்கிறார்.
தம்பியானவன் அழட்டும் என்று கல்லறை வாசலில் வந்து நின்றுவிட்டான்.
அவர் அழுது தேறி, இடுப்பில் வைத்திருந்த குவாட்டரை அந்தகல்லறையின் மேல் வைத்துவிட்டு கல்லறையை கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அமைதியாக தம்பியிடம் வந்து போகலாம் என சொல்லி இருககிறார்.
என்ன மாதிரியான அன்பு இது. ஒரு சினிமா நடிகனுக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பெரிய கௌரவம் இதுவல்லவா… ஒரு சாதாரண விவசாயி, அவன் இறந்து அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, அவன் நடித்த படங்கள் சின்னத்திரைக்குள் போய்விட்ட பிறகு, அவனது படங்களை அவர் இருந்து பார்த்த தியேட்டர்களே கூட மறைந்த பிறகு இப்படி உளப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறார் என்றால் இது என்ன வகையான பிரியம் அல்லது ரசனை..
இப்படியான ஆயிரக்கணக்கான பேர்கள் அவனை வெறி கொண்டு பிரியம் செய்வது தெரிந்துதான் அவன் இருந்தானா..? இத்தனை பேரையும் மனதார விட்டுவிட்டுதான் கிட்டத்தட்ட தற்கொலை போல செத்தானா..? அன்றைக்கு அந்த கல்லறையில் சிந்தப்பட்ட கண்ணீர்த் துளியும், எளிய மனிதனொருவன் வைத்த குவாட்டர் பாட்டிலும் அவனுக்கு சென்று சேர்ந்திருக்குமா..
தெரியவில்லை. ஜனாதிபதி முதல், சாதாரண மனிதன் வரை அனைவரையும் வசியம் செய்த அந்த மாயக்காரன் எப்போதும் எனக்கு சினிமாவின் ஆதர்சங்களில் ஒருவன்தான். நீ சக்கரவர்த்திடா.. ஐ லவ் யு..
(எங்கள் ஊர் மக்களால் ஜேபி என்று அன்பாக அழைக்கப்பட்டு நேசிக்கப்பட்ட ஜோசஃப் பனிமயநாதன் சந்திரபாபு என்னும் ஜேபி சந்திரபாபுவின் (பிறந்தநாள் ஆகஸ்ட் – 5 )பதிவு. அவர் நினைவாக, ஏற்கெனவே எழுதிய சில சம்பவங்களையும் வைத்து நான் எழுதியது.)
நன்றி: நந்தன் ஸ்ரீதரன் முகநூல் பதிவு.