Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆரின் இசைஞானத்தைக் கண்டு வியந்தேன்!

இசையமைப்பாளர் கணேஷின் அனுபவப் பகிர்வு

162

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் திரைப்படங்களுக்கு சுப்பையா நாயுடு, ஜி.ராமநாத ஐயர், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி இவர்கள்தான் அந்தக் காலத்தில் இசையமைத்துக் கொடுத்தனர்.

அவர்களைத் தொடர்ந்து எனக்கும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது என் வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

எம்.ஜி.ஆருக்கு நான் மிகவும் செல்லப்பிள்ளை. எம்.ஜி.ஆர். புத்தாண்டு தினத்திற்கு அனைவருக்கும் 10 ரூபாய் கொடுப்பார். ஆனால், எனக்கு மட்டும் 100 ரூபாய் கொடுப்பார்.

அதற்கு ஜானகி அம்மா, “நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா… உனக்கு மட்டும் 100 ரூபாய்..” என்று கிண்டலாகச் சொல்வார். இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

என்னுடைய மாமனார் ஜி.என். வேலுமணியின் மகளாகிய என் மனைவி சந்திரிகாவை அவர் தனது மகளாக நினைப்பதால், எப்போதுமே என்னை மாப்பிள்ளை என்றுதான் கூப்பிடுவார்.

என் மீது கொண்ட அதீதப் பிரியத்தால், ‘இதய வீணை’ என்ற படத்தில் இசையமைக்க எனக்கு வாய்ப்புத் தந்தார்.

அதன்பிறகு மணியன் சார் அலுவலகத்தில் கம்போஸிங் நடந்தது. அன்று மதியத்திற்குள் வெவ்வேறு விதத்தில் கிட்டத்தட்ட 105 டியூன்கள் வரை தயார் செய்து வைத்திருந்தோம்.

ஷூட்டிங் முடிந்து வந்த எம்.ஜி.ஆர். டியூன்களை வாசித்துக் காட்டச் சொன்னார். 105 டியூன்களையும் வாசித்துக் காட்டியதும், அவர் ஆரம்பத்தில் வாசித்துக்காட்டப்பட்ட 5-வது டியூனையும், அதன்பிறகு 15 மற்றும் 25-வது டியூனையும் மீண்டும் வாசித்துக் காட்டச் சொன்னார்.

டியூன்களை அவர் ஞாபகம் வைத்திருந்த விதத்திலிருந்தே அவர் ஒரு இசை வள்ளல் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

சிறிது நேரம் யோசித்தபின் அந்த மூன்று டியூன்களையும் ஒரு சேர வாசித்துக் காட்டச் சொன்னார்.

மூன்றுமே வெவ்வேறு விதத்தில் அமைந்த டியூன்கள் என்பதால், சற்று திணறினோம்.

அதன்பின்னர், சங்கர் முதல் டியூனையும், நான் இரண்டாவது டியூனையும், தொடர்ந்து சங்கர் மூன்றாவது டியூனையும் பாடிக் காட்டினோம். அதன்பின்னர் அந்த டியூனை தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.

அதன்பிறகு ரீ-ரெக்கார்டிங் நடந்தது. அப்போது அங்கு வந்த புரட்சித் தலைவர் ரிக்கார்டிங்கில் வீணை இசைத்துப் பாடலை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, நிறைய வீணையைப் பயன்படுத்தி, சண்டைக் காட்சிக்கான இசையை உருவாக்கச் சொல்லிவிட்டார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட 40 வீணைகள் கொண்டுவரப்பட்டு சண்டைக் காட்சிக்கான பின்னணி இசையை உருவாக்கினோம்.

யாரும் இதுவரை வீணைகளைக் கொண்டு சண்டைக் காட்சிக்கான இசையை அமைத்ததில்லை.

‘வீணை’ பாலச்சந்தர் இதைப்பார்த்துவிட்டு, இதை எத்தனை மாதங்களாக கம்போஸ் செய்தீர்கள் என்று கேட்டார்.

அவரிடம் நேற்று கம்போஸ் செய்து இன்று வெளியிட்டோம் என்று சொன்னதும் அவர் வியந்து பாராட்டினார்.

இந்தப் புகழெல்லாம் கிடைத்ததற்கு புரட்சித் தலைவர் தான் காரணம் என்று கூறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

– கணேசின் நேர்காணலில் இருந்து…