இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் ‘அறிவு’ திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது.
படத்தில் I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கதையும், திரைக்கதையும் எழுதி இயக்கும் சத்யசிவா, வலுவான சமூக கருத்துக்களை விறுவிறுப்பான சினிமா மொழியில் சொல்வதில் பெயர் பெற்றவர்.
இப்படத்தினை Movietron Production சார்பில் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் பெரும் பொருட்செலவில் தரமான படைப்பாக உருவாக்கி வருகிறார் இணைத் தயாரிப்பாளர் சாய்பிரபு ஜெயக்குமார் செயல்படுகிறார்.
D.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்ள, படத்தொகுப்பை வெற்றி கிருஷ்ணன் கவனிக்கிறார். கலை இயக்குநராக S.K., கிரியேட்டிவ் ஹெட்டாக ராமு M. பணியாற்றுகின்றனர்.
மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார்.
அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
மாணவர்களுக்கான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டதோடு, அவர்கள் தினசரி கல்வி பெற தேவையான அடிப்படை வசதிகளும் முழுமையாக வழங்கப்பட்டன.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளிக்கு வழங்கப்பட்ட இந்த உதவி, படக்குழுவின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துகிறது.
‘அறிவு’ திரைப்படம் ஆரம்பத்திலிருந்தே பெண் உரிமைகளை மையமாகக் கொண்ட வலுவான சமூகக் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.
தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்னதாக படப்பிடிப்பை முழுமையாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
மனிதநேய செயல்களுடன் முன்னேறும் ‘அறிவு’ திரைப்படம், திரையுலகில் மட்டுமின்றி சமூகத்திலும் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.