மருத்துவ உதவியை எதிர்நோக்கும் ‘சிரிக்கோ’ உதயா!

சந்தானம் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதிய சிரிப்பு நடிகர் ‘சிரிக்கோ உதயா’ சக்கரை வியாதியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் வலது கால் அகற்றப்பட்டுள்ளது.

பல திரைப்படங்களில் நடித்து, லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் சந்திரன் பாபுவின் மகன் சிரிக்கோ உதயா சிறந்த வயலின் கலைஞரும் கூட.

35 வருடங்களாக சினிமா துறையிலும் இசை துறையிலும் லக்ஷ்மன் சுருதியிலும் பணியாற்றியவர். சிறந்த மிமிக்ரி கலைஞரும் கூட. பிரபலமான பாடல்களுக்கு வயலின் வாசித்திருக்கிறார்.

சந்தானம் நடித்த பல திரைப்படங்களுக்கு உடனிருந்து 15 வருடங்களாக காமெடி ஸ்கிரிப்ட்டில் பணியாற்றி இருக்கிறார்.

“யாரு சார் உங்க ரிலையன்ஸ்சா” “தானா வந்த தமன்னாவை தலைல தட்டி அனுப்பிட்டானே” “ராணுவத்தில் அழிஞ்சவனை காட்டிலும் ஆணவத்தில் அழிஞ்சவன் தான் அதிகம்” போன்ற பல பிரபலமான டயலாக்குகள் இவரின் கைவண்ணத்தில் உருவானது.

அண்மையில் அவருக்கு சர்க்கரை வியாதியால் வலது காலை எடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது மகன், மகளின் திருமணத்தை சமீபத்தில் நடத்திய நிலையில் கடனாளியாகி வறுமை நிலையில் இருக்கும் அவரை நினைத்து குடும்பத்தினர் மிகவும் கவலையாக உள்ளனர்.

கலைத்துறையில் இனிமேல் வாய்ப்புகள் வருமா என்ற நிலையில் அவருடைய எதிர்காலம் இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது.

கடைசியாக கனாக்காணும் காலங்கள் என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். “இப்போ என் வாழ்க்கையே கனவு காண்ற வாழ்க்கையா மாறிப்போச்சு” அப்படின்னு வருத்தத்தோடு இருக்கார் ‘சிரிக்கோ உதயா’.

மருத்துவ உதவிகள் தேவைப்படும் நிலையில் இருக்கும் அவருக்கு சில திரை நட்சத்திரங்கள் உதவி செய்து வருகின்றனர்.

வாழ்நாள் முழுவதும் பிறரை சிரிக்க வைத்து தன்னுடைய வயலின் இசையால் மகிழ்வித்த ஒரு கலைஞன் இப்போது உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்.

தொடர்புக்கு ;
சிரிக்கோ உதயா
70107 34646

Comments (0)
Add Comment