மைலாஞ்சி – உயிர்ப்பான காதல் கதை!

ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குருப், முனீஸ்காந்த், சிங்கம் புலி நடிப்பில், எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கி இருக்கும் படம் ‘மைலாஞ்சி’.

ஊட்டியில் ஓர் ஆங்கிலோ – இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் சாரல் (கிரிஷா குருப்).

அம்மா அப்பா இல்லாத நிலையில் சித்தியோடு வாழ்பவள் அவள்.

அவள் பெயரில் உள்ள சொத்துக்காக, தன் குடிகாரத் தம்பிக்கு சாரலைக் கட்டி வைக்க நினைக்கிறாள் சித்தி.

அது பிடிக்காத சாரலுக்கு, பக்கத்து வீட்டுச் சிறுவன் ஒருவன், “உன் லெவலுக்கு அழகான யாரையாவது லவ் பண்ணி கல்யாணம் செய்துகொள்” என்று ஐடியா கொடுக்கிறான்.

அங்கு என்ஜினீயராக வேலை செய்யும் சென்னை இளைஞன் ஒருவனை சாரல் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

அந்தக் காதலை சொல்வதற்குள் என்ஜினீயர் அங்கிருந்து கிளம்பிப் போய் விடுகிறான்.

இந்த நிலையில் பறவையியல் ஃபோட்டோகிராபரான இளைஞன் ஒருவன் (ஸ்ரீராம்) laughing thrush என்ற அரிய வகைப் பறவையைப் படம் எடுக்க அங்கு வருகிறான்.

சாரலும் அவனும் சந்திக்கிறார்கள்.

தன் காதலன் பற்றி அவனிடம் சொல்கிறாள் சாரல். தன் காதலுக்கு உதவச் சொல்கிறாள்.

ஆனால் புகைப்படக்காரனுக்கு சாரல் மேல் காதல் வருகிறது. எனவே அவன் காதலனை கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி, அவன் வருவான் என்று சொல்லி அவளை பலமுறை காத்திருக்க வைக்கிறான்.

காத்திருந்து ஏமாறும் அவள் காதலனை வெறுக்கிறாள். புகைப்படக்காரனைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள்.

ஆனால், அவள் பழைய காதலில் இருந்து மாறமாட்டாள் என்று முடிவு செய்து விடுகிறான் புகைப்படக்காரன்.

எனவே சாரலின் காதலனை தீவிரமாக முயன்று கண்டுபிடித்து விடுகிறான். என்ஜினீயர் சாரலை மணக்க விரும்புவதை சித்தியும் ஏற்கிறாள்.

ஆனால், சாரல் குழம்புகிறாள். சாரல் கிடைக்காததை தாங்க முடியாத புகைப்படக்காரன் அங்கிருந்து போய் விடுகிறான்.

சாரலால் என்ஜினீயரை மணக்க முடியவில்லை. காரணம் புகைப்படக்காரனை மறக்க முடியவில்லை.

சாரலின் காதல், புகைப்படக்காரனின் காதல், என்ஜினீயரின் காதல் என்ன ஆனது என்பதே படம்.

மைலாஞ்சி என்பது ஊட்டியில் உள்ள ஓர் இடத்தின் பெயர்.

படத்தின் மிகப்பெரிய பலம், முதல் பலம் செழியனின் அற்புதமான ஒளிப்பதிவு. எங்கே கேமரா வைத்தாலும் அழகாகவே இருக்கும் ஊட்டியின் மலைப்பாங்கும் பசுமையும்.

ஆனால், அந்தச் சலுகையை எடுத்துக் கொள்ளாமல் ஒளிச் சிற்பம் செதுக்கி இருக்கிறார் செழியன். பார்க்கச் சலிக்கவே இல்லை.

இரண்டாவது பெரிய பலம், தொண்ணூறுகளின் பாணியில் இருந்தாலும் இசைஞானி இளையராஜாவின் அற்புதமான இசை.

இவர்கள் இரண்டு பேரும் படத்தைத் தூக்கி நிறுத்துகிறார்கள்.

கிரிஷா குருப் உற்சாகமாக சிறப்பாக சலிக்காமல் அழகாக நடிக்கிறார். ஸ்ரீராம் இயல்பு.

மிக மெல்லிய கதை. காட்சிகளும் அவை அமைக்கப்பட்ட விதமும் பழமையாக இருக்கிறது.

கதாபாத்திரங்கள் இன்னும் சரியாக வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

பெரிய பெரிய திருப்பங்களுக்கான காரணங்கள் மிக மெலிதாகவோ அல்லது பொருத்தமாக இல்லாமலோ இருக்கின்றன.

கதைப் போக்கு செயற்கையாக இருக்கிறது. எனினும் சில இடங்களில் கவிதை போல காட்சிகளை வைத்திருக்கிறார் அஜயன் பாலா.

அந்த சீனியர் போட்டோகிராபர் பேசும் விதமும் சொல்லும் விஷயமும் ஒரு தற்சார்புக் கவிதை.

ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் ஓரளவுக்கு சேதாரம் குறைக்கிறது.

செழியன், இளையராஜா எல்லாம் இருக்கும் நிலையில் இன்னும் நல்ல கதை, சிறப்பான திரைக்கதை செய்திருக்கலாம்.

எனினும் இது ஓர் இளமை துள்ளும் காதல் கதை.

மைலாஞ்சி… கண்ணுக்கு சிலிர்ப்பு. காதுக்கு உயிர்ப்பு.

மகுடம் சூடும் கலைஞர் – செழியன்.

– சு. செந்தில்குமரன்

Comments (0)
Add Comment