பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களைக் கொடுத்த டைரக்டர் எஸ்.எஸ். ராஜமவுலிக்கு நேற்று (அக்டோபர் – 10) 52-வதுபிறந்த நாள். இதையொட்டி அவருக்கு, ஜுனியர் என்.டி.ஆர்., ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்ட ஹீரோக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பாகுபலி படத்தின் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டும், இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டும் வெளியானது. அதாவது பாகுபலி வெளியாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன.
இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய, படத் தயாரிப்பாளர் விரும்பினார். தனது ஆசையை ராஜமவுலியிடம் தெரிவித்தார்.
இரண்டு பாகங்களையும் ஒன்றாக இணைத்து, ‘பாகுபலி – தி எபிக்’ என்ற பெயரில் ரீ–ரீலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதற்கான எடிட்டிங் பணிகளை ராஜமவுலி சில மாதங்களாகவே கவனித்து வந்தார்.
எடிட்டிங் முடிந்து விட்டது, 3 மணி நேரம் 50 நிமிடங்கள் படம் ஓடுகிறது. இரண்டு பாகங்களில் இடம் பெற்ற சில காட்சிகள், சில பாடல்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
தான் உருவாக்கிய சில காட்சிகளை ‘பலி’ கொடுத்துவிட்டு ‘பாகுபலி – தி எபிக்’கை முடித்து விட்டார் ராஜமவுலி.
– பாப்பாங்குளம் பாரதி