கம்பீரக்குரலுக்கு சொந்தக்காரரான வில்லன் நடிகர் திரு. பி. எஸ். வீரப்பா இவர் புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலான படங்களில் வில்லனாக நடித்த இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
1911-ம் ஆண்டு காங்கேயத்தில் பிறந்த வீரப்பா பொள்ளாச்சியில் உள்ள தனது தாத்தாவின் வீட்டில் வளர்ந்தார். படிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த போதிலும், அதிகப்படியான குடும்ப உறுப்பினர்களும், குறைந்த குடும்ப வருமானம் இருந்த காரணத்தினாலும் பல சிறு வியாபாரம், தொழில்களில் ஈடுபட்டார். சென்னைக்கு வரும் முன்னர் கோயில் திருவிழாக்களில் நடைபெறும் நாடகங்களில் நடித்து வந்தார்.
சிவன்மலையில் அப்படி நடைபெற்ற ஒரு நாடகத்தில் இவரைப் பார்த்த கே. பி. சுந்தராம்பாளும் அவரது சகோதரரும், சென்னைக்கு வருமாறும், திரைப்படங்களில் நடிக்குமாறும் வலியுறுத்தினர்.
சென்னைக்கு வந்த பிறகு கே. பி. சுந்தராம்பாள் தன்னுடைய ஒரு சிபாரிசுக் கடிதத்துடன் இவரை இயக்குனர் எல்லீஸ் ஆர்.டங்கனிடம் அனுப்பினார்.
திரைப்பட வாழ்க்கை
பி. எஸ். வீரப்பாவின் உரத்த சத்தத்துடன் கூடிய பயங்கரச் சிரிப்பு அந்தக்காலத்து திரைப்பட ரசிகர்களிடையே மிகப் பிரபலம். கே. பி. சுந்தராம்பாள் முக்கிய வேடத்தில் நடித்த, டங்கனின் மணிமேகலை என்கிற திரைப்படத்தில் வீரப்பா அறிமுகமானார். தனது முத்திரைச் சிரிப்பான உரத்த ஹ ஹா ஹா.. என்பதை சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்தில் செய்தார்.
இந்தச் சிரிப்பிற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக அதன் பிறகு, இதை தனது பாணியாக எல்லாப் படங்களிலும் பயன்படுத்த ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் திரைப்படங்கள் முதல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் உள்ளிட்ட நாயகர்களின் படங்கள் வரை நடித்துள்ளார்.
பி. எஸ். வீரப்பாவின் புகழ்பெற்ற நடிப்பு பாணிகள், முத்திரை வசனங்கள்
எதிர் நாயகன்களுக்கு உரிய உரத்த ஹ ஹா ஹா.. சிரிப்பு (சக்கரவர்த்தி திருமகள் திரைப்படத்திலிருந்து, கிட்டத்தட்ட எல்லாப் படங்களிலும்) சபாஷ், சரியான போட்டி. (வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில்) மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி (மகாதேவி திரைப்படத்தில்).