சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா பற்றி அவதூறாகப் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் எம்எஸ். பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ” சமீபத்தில் வெளியான ‘The Road’ திரைப்படத்தில் திரிஷாவோடு நடித்திருந்தேன். அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் அவர் பழகிய விதமும், அனைவரிடமும் அவர் காட்டிய மரியாதையும் மனதை விட்டு அகலாதவை! மிகவும் தன்மையானவர்.
மரியாதைக்குரிய சகோதரர் மன்சூரலிகான் ‘லியோ’ விழாவில் திரிஷா பற்றியும், மடோனா பற்றியும், குஷ்பூ பற்றியும், ரோஜா பற்றியும் பேசியது ரசிக்கத் தகுந்ததாக இல்லை.
நகைச்சுவையாக பேசுகிறேன் என்று கேட்போர் மனம் புண்படும் விதத்தில் பேசலாமா?
இந்தப் பேச்சுக்கு வக்ர மனம் படைத்த சிலர் அவர் பேசிய நடிகைகள் குறித்து எவ்வாறு கமெண்ட் செய்திருக்கிறார்கள் என்று சகோதரர் பார்க்க வேண்டும்.
‘எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு… பொழப்ப பாருங்கய்யா’ என்று சொல்லும் சகோதரர் தற்போது பேசியிருப்பது உலகிற்கு தேவையான பிரச்சினையா? என்பதை சற்று சிந்தித்து பேசியிருக்க வேண்டும்.
சகோதரருக்கு ‘இனி இவ்வாறு பேசாதீர்கள்’ என்று அன்பான வேண்டுகோள் வைப்பதுடன், உரிமையோடு கடும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.